Skip to main content

ஜேஎன்யு பல்கலைக்கழக சுவரில் கிறுக்கப்பட்ட வாசகங்கள்; பதற்றத்தில் டெல்லி 

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Slogans scrawled on the walls of JNU University; Delhi in tension

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்யூனிச, அம்பேத்கரிய மாணவர்கள் இயக்கத்துக்கும் இந்துத்துவ ஏ.பி.வி.பி மாணவர்கள் இயக்கத்துக்குமிடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமான ஒன்று. கடந்த நான்காண்டுகளில் மட்டும் சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம், தேர்வு முறைக்கு எதிரான போராட்டம் என்று பல்வேறு போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. காவல்துறையினர் தடியடி நடத்திய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. சமீபத்தில் ராம நவமியன்று அங்குள்ள விடுதியில் வழக்கம்போல் அசைவ உணவு பரிமாறப்பட்டதற்கு இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தது பிரச்சனையானது. கடந்த நவம்பரில்கூட மாணவர் குழுவுக்குள் நடந்த பிரச்சனையில் காவல்துறை வரைக்கும் புகார் சென்றது.

 

இப்படியான சூழலில்தான், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இங்குள்ள பேராசிரியர்களின் அறைச்சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்களை சிவப்பு வண்ண பெயிண்ட்டால் யாரோ எழுதியது சர்ச்சையாகியிருக்கிறது. சிவப்பு வண்ண பெயிண்ட்டால் 'பிராமணர்களே இங்கிருந்து வெளியேறுங்கள்', 'ஷாகாவுக்கே திரும்பிச் செல்லுங்கள்', பிராமணர்களே பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம்', 'ரத்தம் சிந்த வேண்டியிருக்கும்' என்பது போன்ற மிரட்டலான வாசகங்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக விசாரணைக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

 

இதுவரை அந்த வாசகங்களை எழுதியவர்கள் யாரென்பது கண்டறியப்படவில்லை. பிராமணர்களுக்கு எதிரானவர்கள் எழுதியிருப்பார்களா அல்லது சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இந்துத்துவ அமைப்பினரே இதுபோன்று செய்திருப்பார்களா என்பது தெரியவில்லை. இந்த வாசகங்கள் குறித்த செய்தி பரவத் தொடங்கவுமே கல்லூரியைத் தாண்டி, பொதுவெளியிலும் பலராலும் கண்டிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் #BrahminLivesMatter என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பிராமணர்களுக்கு ஆதரவான பதிவுகளைப் போடத் தொடங்கினார்கள். இந்த விவகாரத்தில் இதுவரை எழுதியவர்களைக் கண்டறிய முடியாத நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் அமைப்பு இச்செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. 

 

ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினரோ கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் இறங்கி சமூக அமைதியைக் கெடுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளி, கல்லூரி சுவர்களில் ஜாதி, மத ரீதியான வாசகங்கள் எழுதப்பட்டு அதன்மூலம் மிகப்பெரிய கலவரம் நடப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது யாராக இருந்தாலும் அவர்களை விரைவாகக் கண்டறிந்து சட்டப்படி கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். கல்விக்கூடங்களில் ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

கெஜ்ரிவால் வழக்கு; அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.04.2024) விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (15.04.2024) முடிவடைவதையொட்டி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.