ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது மேலும் 4 ஷெல் நிறுவனங்களுக்கு முறைகேடான வழியில் அனுமதி வழங்கியதாக தற்போது புகார் எழுந்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றங்களை நிகழ்த்துவதற்காகவே பல நிறுவனங்கள் பெயரளவில் மட்டும் தொடங்கப்படுகின்றன. இந்த போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நிகழ்த்தப்படும். இத்தகைய போலி நிறுவனங்களே, ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அப்படி புதிதாக 4 ஷெல் நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதி கொடுத்தார் என தற்போது புதிதாக புகார் எழுந்துள்ளது. டியாஜியோ ஸ்காட்லேண்ட் நிறுவனம், கட்டாரா ஹோல்டிங்ஸ், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம், எல்போர்ஜ் நிறுவனம் என்ற பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு நிறுவனத்திலும் தலா ரூ.300 கோடி வரை சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்களை அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.