
இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். அதே வேளையில் இன்று (05.06.2024) பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கினர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரவெளபதி முர்முவை இன்று (05.06.2024) சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA - என்டிஏ) தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நாளை மறுநாள் (07.06.2024) நடைபெற உள்ளது. அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பார்கள். அதன் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைய சுயேட்சை மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.