Skip to main content

வழிபாட்டுக்கூட்டம் ஏற்படுத்திய விபரீதம்... நூற்றுக்கணக்கான மக்களுக்கு கரோனா அறிகுறிகள்...

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்களுக்கு கரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

nizamuddin dargah area sealed due to corona fear

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த சிறப்பு மத வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பலருக்குக் கரோனா தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் நடந்த இந்த வழிபாட்டுக் கூட்டத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்தக் கூட்டத்திற்கு, சவுதி அரேபியா, இந்தோனேசியா மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்துள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையிலும் இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 85 பேர் எல்என்ஜேபி மருத்துவமனைக்கும், 68 பேர் பிற மருத்துவ மனைகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம் எனப் பல இந்திய மாநிலங்களிலிருந்து இந்த நிகழ்ச்சிக்குச் சென்று திரும்பியவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, திங்கள்கிழமை நிலவரப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேருக்கு கரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 1,000 பேர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தெற்கு டெல்லி நிஜாமுதீன் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்