ஐடிசி நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஸ்வர் கடந்த வாரம் காலமானதை அடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஐடிசி நிர்வாக குழு கூட்டம் கூடியது. இதில் தற்போது ஐடிசி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பை வகிக்கும் சஞ்ஜீவ் பூரி ஐடிசி நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஐடி மாணவரான சஞ்ஜீவ் பூரி, வார்டன் வர்த்தக கல்வி மையத்தில் மேலாண்மை படிப்பு முடித்தவர். 1986- ஆம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சஞ்ஜீவ் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தார். அதே போல் 2015 ஆம் ஆண்டு ஐடிசி இயக்குனர் குழுவிலும், 2017- ஆம் ஆண்டு ஐடிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

ஐடிசி நிறுவனத்தின் இன்ஃபோடெக் தலைவராகவும் , ஐடிசியின் துணை நிறுவனமான சூர்ய நேபாள் நிர்வாக இயக்குனராக சஞ்ஜீவ் பூரி செயல்படுவார் என ஐடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ஐடிசி நிறுவனம் சுமார் ரூபாய் 3481 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. ஆனால் முந்தைய ஆண்டை காட்டிலும் லாபம் 15% அதிகம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஐடிசி நிறுவனம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.