Skip to main content

“விழுப்புரம் எம்.பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை?” - திருமாவளவனுக்கு தமிழிசை கேள்வி

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Governor Tamilisai condemned the struggle by vck

 

ஜிப்மர் மருத்துவமனையை கண்டித்து திருமாவளவன் எம்.பி நடத்திய போராட்டத்தை புதுவை மாநில ஆளுநர் தமிழிசை கடுமையாக சாடியுள்ளார். 

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 63 வகை உயர் சிகிச்சைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற சுற்றறிக்கையை ஜிப்மர் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜிப்மர் மருத்துவமனை நுழைவுவாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மருத்துவத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மருத்துவம் பார்க்க முடியாமலும், மருந்துகள் வாங்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். ஏழைகள் இறந்தால் 150 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அவர்களது உடலை எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  இங்கு 63 வகை உயர் சிகிச்சைகளுக்கு கட்டண முறை என தற்போது அறிவித்துள்ளார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை என்கின்றனர். அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

 

இதனிடேயே இந்திய அஞ்சல் துறை சார்பில் கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சல் வழி ஏற்றுமதி மையம் குறித்து நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களுக்கு முழு சேவையாற்றி வருகிறது. இந்த மருத்துவமனையில் 70% சேவை தமிழக மக்களே பெறுகின்றனர். மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற மாநிலங்களில் செய்யக்கூடிய பரிசோதனைகளை இங்கே தற்போது செய்யத் தொடங்கியுள்ளனர். அதையெல்லாம் பாராட்டமாட்டார்கள். ஜிப்ரில் ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது பொய்யான செய்தி. அவர்களுக்கு இலவசமாகத் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வது நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது போல் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் எம்.பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை? இவர்களுக்கு விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளட்டும். அவர்கள் தொகுதிக்கு சென்று அங்கு பணி செய்யலாம், புதுச்சேரிக்கு தேவையில்லை. போராட்டம் நடத்தும் அளவுக்கு ஜிப்மர் செயல்படவில்லை. ஜிப்மரில் ஏழை எளிய மக்களிடம் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது எந்த விதத்திலும் உண்மை இல்லை. அப்படி கட்டணம் வசூலித்தால் அதை நானே திருப்பித் தர சொல்கிறேன். ஜிப்மரின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் இயக்குநரைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். குறை இருந்தால் சொல்லட்டும், அதை சரி செய்யலாம்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.