Skip to main content

புலம்பெயர்வில் இறந்தவர்கள் விவரம் அரசிடம் இல்லை!!! கைவிரித்த மத்திய அரசு...

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

The government does not have the details of those who died in the diaspora

 

 

உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட கரோனா, இந்தியாவுக்குள் காலடி எடுத்துவைத்து நாளொரு மேனியும் பொழுதொரு எண்ணிக்கையுமாக பெருகிவருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கியதையடுத்து, கரோனா கால புலம்பெயர்வுகள், மரணங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

 

அப்போது மாநிலவாரியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையைத் தெரிவித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், “உத்தரப்பிரதேசத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து 32 லட்சம்பேர் திரும்பியுள்ளனர். பீகாருக்கு 15 லட்சம் பேரும், ஒட்டுமொத்தமாக 1 கோடியே நான்கு லட்சம் பேரும் கரோனா காரணமாக தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்” என தெரிவித்தார். 

 

கேரளா மற்றும் தமிழகத்தில்தான் கரோனா காரணமாக குறைந்த அளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். தமிழகத்துக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,050 ஆகும். அதேசமயம் கரோனா ஊரடங்கில் புலம்பெயர்ந்தபோது இறந்தவர்களின் விவரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது மத்திய அரசு இதுகுறித்து தன்னிடம் எந்த புள்ளிவிவரமும் இல்லையென மறுத்துள்ளது. அதனால் யாருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளது. ரயிலிலும், சாலையிலும், கால்நடையாகவும் புலம்பெயர்ந்தபோது விபத்திலும் உடல்நலக்குறைவு காரணமாகவும் இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 198 என சேவ் லைஃப் பவுண்டேஷன் அமைப்பு மே 31-ஆம் தேதி தெரிவித்திருந்தது.

 

இத்தகைய கொடூர தொற்று நிலவும் காலகட்டத்தில் இடம்பெயரும் தொழிலாளர்களை தேசமே கண்கொண்டு பார்த்த நிலையில் அதுகுறித்து உரிய தரவுகள் இல்லையென மத்திய அரசு கூறுவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

“ஒரு தனியார் அமைப்பு இத்தனை சீரியஸாக இறந்தவர்களின் எண்ணிக்கையை அக்கறையுடன் கணக்கிடமுடியும்போது, அரசாங்கம் இன்னும் எளிதாகவும் துல்லியமாகவும் இந்த கணக்குகளை பதிவிடமுடியும். நம் அரசாங்கம் இத்தகைய தரவுகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்” என சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.