Skip to main content

"அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்" - முதல்வர் பதவியை இராஜினாமா செய்த அமரீந்தர் சிங் வேதனை!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

captain amarinder singh

 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.

 

இருப்பினும் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

 

இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, இன்று (18.09.2021) காங்கிரஸ் சட்டமன்றக் குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே, கேப்டன் அமரீந்தர் சிங்கை இராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியதாகவும், அதற்கு, தன்னை பதவி விலகச் சொன்னால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிடுவேன் என கேப்டன் அமரீந்தர் சிங் கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு ஆலோசனை நடத்திய கேப்டன் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்தார். மேலும், தனது அமைச்சரவையின் இராஜினாமா கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.

 

ஆளுநரிடம் இராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் அமரீந்தர் சிங், தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற விதத்தால், நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். இன்று காலை காங்கிரஸ் தலைவரிடம் பேசும்போது, இன்று பதவியிலிருந்து விலகப்போவதாக கூறினேன். சமீப மாதங்களில், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது இது மூன்றாவது முறை. எனவே நான் பதவி விலக முடிவுசெய்தேன்" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "நான் காங்கிரஸில்தான் இருக்கிறேன். ஆதரவாளர்களோடு ஆலோசித்து எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன். அவர்களுக்கு (மத்திய தலைமை) யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அவரை முதல்வராக்கலாம்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்