
17 வருடத்திற்கு பிறகு நடப்பாண்டில், முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் தொடர்பாக அங்குள்ள எதிர்க்கட்சிகள், மாநில அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்து குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக, கூட்ட நெரிசலில் தனது ஒரே மகனை இழந்த தந்தை ஒருவர், மகனின் சமாதியில் படுத்து கதறி அழுகும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான பூமிக் லட்சுமணன் பொறியியல் படித்து வந்துள்ளார். இவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது தான் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நேற்று முன் தினம் (07-06-25) நடைபெற்றது. அப்போது தனது பூமிக் லட்சுமணனை அடக்கம் செய்த இடத்தில் அவரது தந்தை பி.டி.லட்சுமணன் படுத்து தனது மகனை நினைத்து கதறி கதறி அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்கலங்க செய்துள்ளது.
துக்கத்தால் திணறிய குரலில் பேசிய அவர், ‘நானும் இங்கேயே இருந்து விடுகிறேன், நான் எங்கும் வரவில்லை. என் மகனுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது. நான் அவனுக்காக வாங்கிய நிலத்தில்தான் அவனது நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது. எந்தவொரு அப்பாவுக்கும் இப்படியொரு சூழ்நிலை வரக்கூடாது’ எனக் கதறி அழுதபடியே கல்லறையில் தலையை அழுத்தி படுத்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மகனுக்காக வாங்கிய நிலத்திலேயே அவரது உடலை புதைத்திருப்பதால், அந்த குடும்பமே மீளாத் துயரத்தில் இருக்கிறது.