
குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சிறிய சண்டையால், பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் 40 வயதான சுனிதா. இவர் பகவதிபூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது பேரன், தண்ணீர் எடுக்கச் சென்ற போது அங்குள்ள குழந்தைகளுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், சுனிதாவுக்கும், அந்த குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராம்கிஷோர் மற்றும் கமலாபூரைச் சேர்ந்த ராம்பரோஸ் ஆகியோர், சுனிதாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கைகள், கால்கள் என தாக்கி மீண்டும் மீண்டும் செங்கற்களால் தாக்கியுள்ளனர். இதில் சுனிதா நிலைகுலைந்துபோனார். படுகாயமடைந்த அவர் ராம்சாகர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில், கொலை செய்த மூன்று பேரும் சம்பவ இடத்தை விட்டு தப்பி தலைமறைவானார்கள்.
இந்த சம்பவம் குறித்து சுனிதாவின் கணவர், போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, போலீசார் அவர்களை கண்டுபிடித்து கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுனிதாவும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரே செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.