
சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க. நந்தகுமார் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “அந்த கடிதத்தில், “விவசாயிகளின் குறுகியகால வேளாண் கடன் தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக உழவர் கடன் அட்டை திட்டம் (KCC - Kisan Credit Card) 1998இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் வேளாண் பணிகளுக்கு குறுகிய காலக் கடன்களைப் பெற விவசாயிகளுக்கு உதவுவதோடு வேளாண்மை சார்ந்த கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட இதர காரியங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வட்டியில்லா பயிர்க்கடன், நகை அடமானத்தின் பேரில் பயிர்க்கடன், கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கான நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு. மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு கடன்கள் தற்போது அதிகளவில் வழங்கப்பட்டு வருவதால் இக்கடன்கள் வழங்குதல் தொடர்பான மாதிரி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வழிகாட்டு நெறிமுறைகளை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு கடன்கள் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களும் நடைமுறைப்படுத்திட தெரிவிக்கப்படுகிறது.
மண்டல இணைப்பதிவாளர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு கடன்கள் வழங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தொடர்புறுத்தி, உரிய துணைவிதிகளின் கீழ் இவ்வழிகாட்டு நெறிமுறைகள் உடன் அங்கீகரிக்கப்பட்டு வழுவாது நடைமுறைப்படுத்தப்படுவதை, மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் உறுதி செய்து தொடர்ந்து கண்காணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும். அதாவது நடைமுறை மூலதனக்கடன் (Working Capital) தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இக்கடன் வழங்கப்பட வேண்டும்.
கடன் பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தற்போது ரூ.2 இலட்சம் வரை தனிநபர் ஜாமீன் அடிப்படையில் பிணையமின்றி கடன் வழங்குவது போல், இக்கடன்களும் வழங்கலாம். வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன்தொகை ரூ.3 இலட்சத்திற்கு உட்பட்டு இக்கடன் வழங்கப்படும். பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ஆகிய இரண்டு கடன்களுக்கும் சேர்த்து ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க் கடன் ஏதும் பெறாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதனக் கடனை திருப்பி செலுத்தினால் 7 வட்டி ஊக்கத்தொகை அரசால் வழங்கப்படும். சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்கம் மற்றும் வங்கிகளுக்கு வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (NABARD) இத்திட்டத்திற்கு வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்றப்பட வேண்டும். மனுதாரர்களின் ஆஸ்தி பொறுப்பு பட்டியல் பெறப்பட வேண்டும். மனுதாரர்களுக்கு சொந்தமான கால்நடைகள் விவரம் குறித்து சுய சான்று பெறப்பட வேண்டும். கால்நடைகளுடன் கடன் மனுதாரர் சங்க செயலாளர் மற்றும் சரக மேற்பார்வையாளர் கட்டுத்தரையுடன் புகைப்படம் எடுத்து கடன் மனுவுடன் இணைக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கோ அல்லது தனியார் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும்.
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தனியார் நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கடன் பெறும் உறுப்பினர்களுடன் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். நிறுவனம் தரும் பணபட்டுவாடவில் மாதம் தோறும் தவனைகளாக 12 மாதங்களில் கடனை திருப்பி செலுத்தும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். உச்சபட்ச கடன் தொகை மற்றும் வட்டி விகிதங்கள் அவ்வப்போது ரிசர்வ் வங்கி, நபார்டு,அரசு, பதிவாளரால் நிர்ணயிக்கப்படும் அளவிற்குட்பட்டு மாறுபடும். இந்த விவரங்களுடன் வழக்கமாக பெறப்படும் கடன் மனு கே.ஒய்.சி. (KYC) உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இக்கடன் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மத்திய வங்கியின் கே.சி.சி. டி.எம்.ஆர். (KCC DMR) கணக்கு மூலம் மட்டுமே பட்டுவாடா செய்ய வேண்டும்.

கால்நடைகள் வாங்குவதற்கு மத்திய வங்கியில் சங்கத்தில் மத்தியக் கால வேளாண் கடன் பெற்று. கடன் தொகை தவணை தவறாமல் இருக்கும் பட்சத்தில் அக்கால்நடை பராமரிப்பிற்கு கால்நடை பராமரிப்பு கடன் நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடன் வழங்கலாம். மீன்வளர்ப்பு பராமரிப்பு கடனில் படகு பராமரிப்பு காரியத்திற்கு கடன் பெறும் பயனாளிகளிடம் படகு உரிமம் (Licence) பதிவு (RC) புத்தகம் அசல் மற்றும் மத்திய மாநில அரசால் வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டை பெற்று இணைக்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் (2025-26) கே.சி.சி. கடன் விண்ணப்பிக்கும் உறுப்பினர்கள் இதர வணிக வங்கிகளில் கே.சி.சி கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை கடன் நிலுவையில்லை என்பது குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கான வழிகளில் ஒன்றாக சம்பந்தப்பட்ட உறுப்பினரின் சிபில் அறிக்கையை (CIBIL Statement) பெற்று உறுதி செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.