
மேற்குவங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அடுத்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அம்மாநிலத்திற்கு இருநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 200 இடங்களை கைபற்றி ஆட்சியமைக்கும். இது நாங்கள் புன்னகைக்கும் நேரம். ஏனெனில் மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அவர் ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மம்தா ஆட்சியில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். கடந்த ஓராண்டில் பாஜக தொண்டர்கள் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை உறுதி செய்து, எல்லையில் ஊடுருவலை தடுத்துத் நிறுத்துவதுமே பாஜகவின் முக்கிய நோக்கம். வாரிசு அரசியலுக்கும் வளர்ச்சி அரசியலுக்கும் நடக்கும் போர் இந்த தேர்தல். " எனத் தெரிவித்தார்.