Skip to main content

நாங்க யாருங்க... பார்ல வேலை செய்யுற சப்ளையரா? புலம்பும் போலீசார்... 

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
tasmac shops



கரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதையடுத்து வரும் மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும் எனவும், மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகாவில் மே 4ஆம் தேதி மதுபானக் கடைகள் திறந்தபோது அதிகளவில் மதுபான பிரியர்கள் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் அதேபோன்று கூட்ட நெரிசல் ஏற்படும், நோய் தொற்று அதிகமாகும் என்று எதிர்க்கட்சியினர் எச்சரித்தனர்.

டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வருவதால், டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்புக்காகவும் மதுபானம் வாங்க வருபவர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பதற்காகவும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் நான்கு போலீசார் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 8 பேர் பணியில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாம். 

 

 


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ''டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே நாங்கள் வந்துவிட வேண்டுமாம். மதுபானம் வாங்க வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கணும். அவர்களை 6 அடி இடைவெளி விட்டு நிற்க சொல்லணும். அதிகமா கூட்டம் கூடினால், சிறிது நேரம் கழிச்சி வாங்கன்னு சொல்லி அந்த இடத்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்தணும். ஒரு நபர் ஒரு புல் மட்டுமே வாங்க வேண்டும். அதனை நான்கு குவாட்டராகவோ, இரண்டு ஆப் பாட்டிலாகவோ, இல்லை ஒரே புல் பாட்டிலாகவோ வாங்கலாம். அதற்கு மேல் வாங்கக் கூடாது. அதனையும் நாங்கள் கண்காணிக்கணும். 

 


இதைவிட இன்னொன்று அங்கேயே யாராவது திடீரென்று குடிக்கப்போனால் அவர்களை தடுக்கணும். அப்படி குடித்தால் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். 40 நாளா குடிக்காம இருந்து திடீரென ராவா குடிச்சு ஏதாவது விபரீதம் ஆனா பிரச்சனை வந்துவிடும் என்பதால் தண்ணீரும் பாதுகாப்புக்கு நிக்கிற போலீசார்தான் தரணுமாம். டம்ளர் மட்டும்தாங்க நாங்க விற்கவில்லை. டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணத்தை வாங்குவாங்க, பாட்டிலை கொடுப்பாங்க. அவ்வளவுதான் அவுங்க வேலை. நாங்க போலீஸ்காரங்களா? இல்ல பார்ல வேலை செய்ய சப்ளையரான்னு தெரியலங்க'' என்றார் வருத்தத்துடன். 


-மகேஷ்
 

 




 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.