Skip to main content

இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் நெருக்கடியில் இந்தியா? சீனா எல்லை மீறுவதற்கு என்ன காரணம்? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

bjp

 

சீனாவின் படைக் குவிப்பு, நேபாளத்தில் எல்லை உரிமை, அவ்வப்போது காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல், தேசமெங்கும் கரோனா ஆக்கிரமிப்பு என சுதந்திர இந்தியாவில் வேறெப்போதும் காணாத நெருக்கடியை இந்திய ஒன்றிய அரசு சந்தித்துவருகிறது.

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்கூட அடிக்கடி எல்லைப் பிரச்சனைகள் வருகின்றன. அப்போதெல்லாம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் என அதிரடி காட்டும் நமது பாதுகாப்புத் துறை. சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை ராணுவ மற்றும் ராஜ்ஜியரீதியான சுமூக முறையில் எதிர்கொள்கிறோம் என்கிறது இந்திய வெளியுறவுத் துறை.

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான எல்லைக் கோட்டை லைன் ஆப் கண்ட்ரோல் (LOC) என்கிறோம். அதாவது இந்திய- பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைக்கோடு இருநாடுகளின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் வரையறுக்கப்பட்டது. மாறாக, இந்திய- சீனாவுக்கு இடையேயான எல்லைக்கோடு லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) எனப்படுகிறது. அதாவது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கோடு பரஸ்பரம் வரையறுக்கப்படவில்லை.

 

இந்தியா குறிப்பிட்ட பகுதிவரை எனது எல்லை எனக் கூறும். சீனா அதற்கு மாறாக ஒரு பகுதியைத் தனது எல்லை எனக் கூறும். பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில், இந்த எல்லை திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை. இந்த எல்லையில் கிட்டத்தட்ட இருநாடுகளுக்கும் தீர்க்கப்படாத சுமார் 23 முரண்பாடும் எல்லைத் தகராறுகள் நீடித்துவருகின்றன. கடந்த ஒருமாதத்துக்கும் மேலான எல்லைத் தகராறில் இதுவரை என்ன நடந்திருக்கிறது?
 

bjp


மே 5 மற்றும் 9 ஆம் தேதிகளில் இந்திய- சீன எல்லையில் இரண்டு உரசல்கள் நிகழ்ந்தன. முதலில் பாங்காங் சோ ஏரிப்பகுதியிலும், பின் சிக்கிம் நாகு லா எல்லையிலும் ரோந்துவரும் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் மோதிக்கொண்டன. இரு தரப்பு ராணுவத்தினருக்கும் காயங்கள் ஏற்பட்டன. இந்த மோதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. கைகளாலும், கட்டைகளாலும் மோதிக் கொண்டனர் என்பது முக்கியமானது. தொடர்ந்து இந்தியத் துருப்புகள் பாங்காங் சோ ஏரிப்பகுதிக்கு விரைந்தன. சைனீஸ் லிபரேஷன் ஆர்மியின் சாப்பர் விமானங்கள் தட்டுப்பட, இந்தியத் தரப்பிலிருந்து SU-30MKI வகை விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்தன.

 

முதலில் இதுபற்றி அதிகாரப் பூர்வமாக இந்தியத் தரப்பில் எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. இத்தகைய மோதல்கள் வழக்கமானதுதான் என்றே சமாளிக்கப்பட்டது. ஆனால் பாங்காங் சோ ஏரிப்பகுதியில் சீன ராணுவங்கள் நூற்றுக்கணக்கான டெண்டுகளை நிறுவியதும், ஏரிப் பகுதியில் சீன ராணுவம் படகுகளில் ரோந்து வரத்துவங்கியதும் இந்திய அரசு வேறுவழியின்றி ஆக்கிரமிப்பைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசத் தொடங்கியது.

 

மே 29-ஆம் தேதி அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமருடன் இந்திய- சீன எல்லை விவகாரம் தொடர்பாக பேசியதாகவும், தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை தொடர்பாக மத்தியஸ்தம் செய்துவைப்பதாகவும் கூறினார். உடனடியாக இந்தியத் தரப்பு, நமது பிரதமர் எல்லைப் பிரச்சனை தொடர்பாக ட்ரம்புடன் இதுவரை பேசவில்லை என மறுத்தது. இரு தரப்பும் பேசி இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என நாகரீகமாக அறிவித்து நழுவிக்கொண்டது.

 

bjp


லடாக்கின் பாங்காங் சோ ஏரிப்பகுதியில் சீனர்கள் அத்துமீறி குறிப்பிட்ட தூரம் முன்னேறியிருப்பதும், அப்பகுதியில் சில கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பதும்தான் யதார்த்தம், செயற்கைக்கோள் காட்டுவதும் அதைத்தான். மாறாக, சீனாவோ, இந்தியா தன் எல்லையைத் தாண்டி கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறது.

 

இந்தியா எல்லைப் பகுதியில் சாலையமைக்கும் பணிகளில் ஈடுபடுவது உண்மைதான். ஆனால் இது இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் அந்தக் கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. இந்தக் கட்டுமானப் பணிகள் முடிந்தால் இந்திய ராணுவம் வாகனங்களில் அந்தப் பகுதிக்கு விரையமுடியும் என்பதுதான் சீனாவின் எரிச்சலுக்குக் காரணம் என்கிறார்கள்.

 

தவிரவும் இப்பகுதிக்கு விரைந்து வரவும் போர் விமானங்களைப் பயன்படுத்தவும் திபெத்தின் விமான நிலையத்துக்கு அருகில் சில கட்டுமான வேலைகளிலும் சாலையமைப்பதிலும் சீனா ஈடுபட்டுள்ளதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டித் தந்துள்ளன.

 

இந்திய ராணுவம் லடாக்கில் ஆண்டுக்கொருமுறை ராணுவப் பயிற்சியில் ஈடுபடும். கரோனா பிரச்சனை காரணமாக அந்தப் பயிற்சியைத் தள்ளிவைத்திருந்தது. அதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் சீன ராணுவம் தன் வழக்கமான எல்லையை விட்டு முன்னேறி வந்திருக்கிறது. இப்பகுதிக்கு இதுவரை சீன ராணுவம் முன்னேறி வந்ததில்லை.

 

மொத்தத்தில் கால்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கு, சுடுநீருற்றுப் பகுதிகளிலும் ஆயுதங்களுடன் சீன ராணுவம் முன்னேறியுள்ளது. இப்போது முன்னேறியுள்ள பகுதிகளிலிருந்து சீன ராணுவம் விலகுமா, இதனை எப்படிப் பேசித் தீர்க்கப்போகிறோம் என்பதுதான் இந்தியாவின் முன்னிருக்கும் பிரச்சனை.

 

இதுவரை இந்தியாவும் சீனாவும் துப்பாக்கிகளைக் கையில் தூக்கவில்லை. ராணுவ அளவில் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்திருக்கின்றன. கர்னல், பிரிகேடியர் லெவல், டிவிஷன் கமாண்டர், கார்ப்பரேஷன் கமாண்டர் லெவல் பேச்சுவார்த்தைகளில் என்ன முடிவு ஏற்பட்டிருக்கிறதென அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதுமில்லை. எப்படியாயினும் நேரடிப் போர் தவிர்க்கப்பட்டிருப்பது சாதகமான விஷயம்.

 

எனினும், முன்னேறிவந்து சீன ராணுவம் தன் ஆளுகைக்குட்பட்ட இடம் எனச் சொல்லும் இடம் இனி இந்தியாவின் இடமாக இருக்குமா… இல்லை சீன ராணுவத்தின் இடமாக மாறுமா என்பதுதான் கேள்விக்குரிய விஷயம்.

 

சாஸ்திர சீமா பாலின் எல்லைப் பகுதியில் நேபாள காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளைஞரொருவர் பலியானது, இந்திய- நேபாள உறவில் மற்றுமொரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது.

 

பீகார்- நேபாள எல்லையில் உள்ள பகுதி சிதார்மஹி. இந்திய- நேபாள எல்லைப் பகுதியில் இப்பகுதி உள்ளதால் வியாபார கொடுக்கல் வாங்கலும், மண உறவுகளும் இப்பகுதியில் சகஜம். லாகன் யாதவ் என்பவரின் மருமகள் நேபாளத்தைச் சேர்ந்தவர். இவர் நேபாள எல்லைக்கு வந்தபோது காவல்படையினர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கின்றனர். லாகன் யாதவுக்கு ஆதரவாக அறுபது பேர் வரை திரண்டுவிட, வாக்குவாதத்தின் முடிவில் நேபாள காவல்துறை துப்பாக்கிச் சூடில் இறங்கியதில் விகேஷ் யாதவ் இறந்துவிட, மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

லிம்புலேக், காலாபானி, லிம்பியாதுரா பகுதிகளை நேபாளம் தனது மேப்பில் இடம்பெறச் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு இந்திய- நேபாள உறவை மேலும் சீர்குலைந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்கெனவே சீனாவை நோக்கிச் சாய்ந்து கொண்டிருக்கும் நேபாளம், நடப்புப் பிரச்சனைகளால் மேலும் மேலும் சீனச் சாய்வுநிலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது.

 

இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் சீனாவின் உறவு நாடுகளாகியிருக்கும் நிலையில், சீனாவின் இராஜதந்திர நடவடிக்கைகளால் இந்தியா தனிமைப்பட்டுநிற்கும் நிலைக்கு ஆளாகிவருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

நேபாளத்தின் புதிய மேப் விவகாரத்தில் இந்திய ராணுவப் படைகளின் ஜெனரலான நரவனே, “பிறரின் தூண்டுதலால்தான் நேபாளம் இப்பிரச்சனையைக் கையிலெடுக்கிறது’’ எனும் தொனியில் குறிப்பிட்டது ஆரம்பக் கட்ட சறுக்கல். இதையடுத்து நேபாள பிரதமர் ஒலியும் கடுமையான தொனியில் அறிக்கைகளை வெளியிட்டார். சீன மற்றும் இத்தாலி கரோனாவைவிட இந்திய கரோனா வைரஸ் ஆபத்தானது என அபத்தமான கருத்துகளைத் தெரிவித்தார்.

 

எனினும் நேபாள பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தங்களது புதிய மேப்புக்கு அங்கீகாரம் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக புதிய மேப்பை மாற்ற முனைந்தது இந்தியாவுக்கு சிக்கலாக மாறியது.

 

இதையடுத்து சமீபத்தில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அனுராக் ஸ்ரீவத்சவா நேபாளத்துக்கும் இந்தியாவுக்குமான கலாச்சார, நாகரிக, நட்புரீதியிலான உறவுகளைப் பெரிதும் மதிப்பதாகச் சமாதான ரீதியிலான அறிக்கை விட்டார்.
 

http://onelink.to/nknapp


லிம்பியாதுராவைத் தவிர மற்ற இரு பகுதிகளை இரு நாடுகளும் தங்கள் மேப்பில் காட்டுவது வழக்கம்தான். புதிதாக லிம்பியாதுராவையும் தங்கள் வரைபடத்தில் சேர்த்திருப்பதுதான் உரசலுக்குக் காரணமானது. இந்தியாவுக்கு எதிராக நேபாளம் குரலுயர்த்துகிறதென்றால் சீனா நிச்சயம் அதன் பின்னணியில் இல்லாமல் இராது.

 

இதை யூகித்து ஆரம்பகட்டத்திலேயே இந்தியத் தரப்பில் சாதுர்யமான நடைமுறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பவர்கள், நடப்பு துப்பாக்கிச் சூடு இரு தரப்பு ராணுவத்துக்குமான மோதல் அல்லதான். ஆனால் இந்தியாவின் மீதான உரசல் இல்லாமலிருந்திருக்கும் பட்சத்தில், அந்தத் துப்பாக்கிச் சூடுக்கான அவசியமே வந்திருக்காது என்கிறார்கள். இந்த இக்கட்டுகளிலிருந்து இந்தியா எப்படி மீண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.