Skip to main content

தர்மபுரியில் 5 தலைமுறையை சேர்ந்த 132 பேர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடிய பொங்கல் விழா! நெகிழ்ச்சியால் களிப்படைந்த இளம் தலைமுறை!!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

மானுட வாழ்வின் முக்கிய கூறுகளாகப் பார்க்கப்படும் உறவுமுறைகளும், பண்பாட்டு விழுமியங்களும் காலவெள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகின்றன. காலங்காலமாக நம்மிடையே இருந்து வந்த பல நடைமுறைகள் முற்றாக அழிந்தும் போயிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி, ஒரே அறைக்குள் நாம் இருந்தாலும், நம்மிடையே தனித்தனி உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், சிதறிக்கிடக்கும் உறவுகளை ஒன்றிணைப்பதிலும் அதே தொழில்நுட்பம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் ஆகப்பெரும் விந்தையும்கூட.

dharmapuri district family pongal celebration


தர்மபுரி மாவட்டம் உங்கரானஹள்ளியைச் சேர்ந்த செந்தில்குமார், இந்திய ராணுவத்தில் மேஜராக, அந்தமான் ரெஜிமென்ட்டில் பணியாற்றுகிறார். பல்வேறு ஊர்களில் சிதறிக்கிடக்கும் தனது சொந்த பந்தங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் இறங்கினார். பொங்கல் விடுமுறையில் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து விட வேண்டும் என்று தீர்மானித்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக இதற்கான பணிகளைச் செய்து வந்தார். 


செந்தில்குமாரின் அண்ணன் சீனிவாசன். நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். சொந்த பந்தங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் செந்தில்குமாருடன் பெரிதும் மெனக்கெட்டிருக்கிறார். 

dharmapuri district family pongal celebration


அடிப்படையில் காணிக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவர்களது பூர்வீகம், ஆந்திர மாநிலம். சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த இச்சமூகத்தினர்தான், மாடுகள் பூட்டி மரச்செக்கு எண்ணெய் பிழியும் தொழிலில் முன்னணியில் இருந்தனர். இச்சமூகத்திலும் இரண்டு பிரிவுகள் உண்டு. இரட்டை மாடுகள் பூட்டி மரச்செக்கில் எண்ணெய் பிழிபவர்களை 'வாணிய செட்டியார்' என்றும், ஒற்றை மாடு பூட்டியவர்கள் 'காணிக' அல்லது 'காண்ட்லா செட்டியார்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.


கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமே இயந்திரமயமாகிய சூழலில் பாரம்பரியமாக செய்து வந்த தொழில் பெரிதும் பாதிக்கப்படவே, பலர் வேலைதேடி வெளியூர்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டது. அதில் சிக்குண்ட ஏனையோர் போலவே இச்சமூகமும் சுழலில் சிக்கியது. இன்று பலர் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் சாப்ட்வேர் துறைகளிலும் பணியாற்றுகின்றனர். தர்மபுரியில் மொத்தமாக பத்தாயிரத்துக்கும் குறைவாகவே இச்சமூகத்தினர் வசிப்பதாகச் சொல்கின்றனர்.

dharmapuri district family pongal celebration



இந்த நிலையில்தான், சீனிவாசன் & செந்தில்குமார் சகோதரர்களின் முயற்சியால் அவர்களின் 7 குடும்பங்களைச் சேர்ந்த நான்கு தலைமுறை உறவுகள் ஜன.19, 2020ம் தேதி, சொந்த ஊரான உங்கரானஹள்ளியில் சந்தித்துள்ளனர். அங்கே, தங்கள் மூதாதையர்களான நாராயணசெட்டி- வெங்கட்டம்மாள் தம்பதியின் உருவப்படங்களை வைத்து மலர்கள் தூவி வழிபட்டுள்ளனர். அதன்பின்னர் உறவினர்கள் அறிமுகம், பழைய நினைவுகள் பகிர்வு, ஆட்டம் பாட்டம் என பல நெகிழ்வான நிகழ்ச்சிகளுடன் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.


இது தொடர்பாக மேஜர் செந்தில்குமார்(38) நம்மிடம் பேசினார்.


''உறவினர்களின் திருமணம் உள்ளிட்ட வீட்டு விஷேங்களுக்கு போகும்போது, நாங்கள் பலரை உறவுமுறை சொல்லித்தான் அன்போடு நலம் விசாரிக்கிறோம். ஆனால், பலருக்கு அந்த உறவுமுறைகள் தெரிவதில்லை. மூன்றாம் நபர்களிடம் பேசுவதுபோல பேசிவிட்டு நகர்ந்து விடுகின்றனர். நாராயணசெட்டி- வெங்கட்டம்மாள் தம்பதிக்கு நான்கு மகள்கள்; மூன்று மகன்கள் என மொத்தம் ஏழு பிள்ளைகள். இவர்களுக்கு பிறந்த வாரிசுகளின் பிள்ளைகளுக்கு உறவுமுறைகள் இடையேயான கண்ணிகள் அறுந்து தொடர்பற்று இருக்கிறது. 

dharmapuri district family pongal celebration


எங்கள் பெரியப்பாக்கள் ராஜூ, வெங்கடேசன் ஆகியோரிடையே ஏதோ மனஸ்தாபங்களால் பேச்சுவார்த்தையே இல்லை. ஆக, எங்கள் சொந்தங்களை ஒன்றிணைப்பது, அதன்மூலமாக உறவுமுறைகளை எல்லோரும் தெரிந்து கொள்வது, குடும்ப பாரம்பரியத்தை பலப்படுத்துவது ஆகியவற்றை மையப்படுத்தி, எல்லாரையும் ஒன்றிணைக்கும் வேலைகளைச் செய்தோம். நான் மட்டுமின்றி, என்னுடைய அண்ணன் சீனிவாசன், பெரியப்பா ராஜூவின் மகன் ஜனார்த்தனன் ஆகியோர் இதற்கான வேலைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொண்டோம். 


தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருக்கும் உறவினர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தாத்தாவுக்குச் சொந்தமான சொந்த விவசாய நிலத்தில் எங்கள் சந்திப்பு நடந்தது. இளம் தலைமுறையினர் எல்லோரும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். நீண்ட காலமாக பேசாமல் இருந்த இரண்டு பெரியப்பாக்களும் கூட அவர்களின் வாரிசுகளிடம் நன்றாக சிரித்துப் பேசினார்கள். அவர்களை அருகருகே உட்கார வைக்கத்தான் முடிந்ததே தவிர இப்போதும் பேச வைக்க முடியவில்லை. அநேகமாக அடுத்த ஒன்றுகூடலில் அதுவும் நிகழும்,'' என்றார் செந்தில்குமார்.

dharmapuri district family pongal celebration


உறவுகளின் சங்கமத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக எல்லாருக்கும் கை நிறைய வளையல்களை அணிவித்துள்ளனர். ஆண்கள், சிறுவர்கள் பலர் அங்கிருந்த கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குதூகளித்துள்ளனர். ஒரே ஊரைச் சேர்ந்த, ஒரே பள்ளியில் பயிலும் இரண்டு சிறுவர்கள் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் இருவரும் நெருக்கமான உறவினர்கள் என்பதை அறியாமல் இருந்து வந்துள்ளனர். இந்த சங்கமத்தில் அந்தச் சிறுவர்களும் கட்டிப்பிடித்து உறவு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சிலர், தங்கள் பழைய நினைவுகளைச் சொல்லும்போது பலரும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டுள்ளனர். 
 

dharmapuri district family pongal celebration


இதுபற்றி சீனிவாசன் (41) கூறுகையில், ''இந்த சங்கமத்தில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த சஷ்திகா, அவருடைய தாயார் சங்கீதா, அவருக்கு தாயார் ஜோதி, சஷ்திகாவின் தாத்தா ராஜூ ஆகியோரும் கலந்து கொண்டனர். ராஜூ - ஜெயலட்சுமி - சுமதி - ஜனனி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அடுத்தடுத்த தலைமுறையினரும் கலந்து கொண்டனர். 


எங்கள் வகையறாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல வாரிசுகளின் குடும்பத்தினர் சந்திப்பது இதுதான் முதல்முறை. இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் 45 பேர்; மற்றவர்கள் சிறுவர்கள். காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை எங்கள் சந்திப்பு நடந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ளவும்,  உறவுகளை அறிமுகப்படுத்திக் கொள்வதிலுமே அதிகம் நேரம் போனது,'' என்றார்.

dharmapuri district family pongal celebration


சேலத்தைச் சேர்ந்த கவுசல்யா சரவணன், ''எங்க பாட்டியை பாயம்மா. தாத்தாவை பாய் தாத்தா என்றுதான் அழைப்போம். இப்போது வரைக்கும் அவர்களின் உண்மையான பெயர்கள் எங்களுக்கு தெரியாது. நான் சிறுமியாக இருக்கும்போது எங்க பாயம்மா நிறைய கதைகள் சொல்லி இருக்காங்க. புராண கதைகள், ஹிரண்யகசிபு கதைகள், ராமாயண கதைகள் எல்லாம் சொல்வாங்க. பாட்டி சொன்ன கதைகளின் பாத்திரப் பெயர்கள் இப்போதும் நினைவில் இருக்கு. பாயம்மா இருக்கும்போதும் பொங்கல் கொண்டாடி இருக்கோம். அவர்கள் இல்லாதது வருத்தம்தான் என்றாலும், இந்த உறவுகளின் சந்திப்பில் அந்த துயரம் மறைந்து விட்டது,'' என நெகிழ்ச்சியுடன் சொன்னார். 


''பாயம்மா, பாய் தாத்தாவின் பேத்தியுடைய பேத்தி நான். ஐந்தாம் தலைமுறைப் பெண். எனக்கு என் சொந்தக்காரர்கள் யார் யார்? எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்றே தெரியாது. இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சியை மறக்கவே முடியாது,'' என்கிறார் பாலஹள்ளியைச் சேர்ந்த ஜனனி.


மதியம், எல்லோருக்கும் மட்டன் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. கல்கோணா, தேன்மிட்டாய், கடலை உருண்டைகள் கொடுத்து, இதுதான் உண்மையான 'காணும் பொங்கல்' என்று சொல்லும் அளவுக்கு, உறவுகளின் சந்திப்பை தித்தித்திப்புடன் நிறைவு செய்திருக்கிறார்கள், பாயம்மா, பாய் தாத்தாவின் வகையறாக்கள்.


 

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.