
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் படக்குழுவினர் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கமல் குறித்து பேசிய அவர், “நான் கமல்ஹாசனுடைய பெரிய ரசிகன். அவர் என்றால் எனக்கு உயிர். அவருடைய படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். அந்த மாதிரி ரசிகர்களில் நானும் ஒருவன். படம் நல்லாயில்லை என்றாலும் நல்லாயிருக்குன்னு சண்டை போடுவேன்.
ராஜ் கமல் நிறுவனத்தின் முதல் படத்தை அப்பா(ராஜ்குமார்) தான் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். அப்போது இருந்து இப்போது வரை அந்த கனெக்ஷன் விட்டுப்போகவில்லை. இனிமேலும் அது தொடரும். நான் மியான்மரில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது எனக்கு கால் பன்னி கமல் பேசினார். அப்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. என் அப்பா பேசியது போல எனக்கு இருந்தது. அதை மறக்கவே மாட்டேன்” என்றார். பின்பு கமலுக்காக ஒரு பாடல் பாடினார். கமல் நடித்த ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் இருந்து ‘ஒரே நாள் உன்னை நான்...’ பாடலை பாடி தனது அன்பை வெளிப்படுத்தினார்.