
திருச்சி குட்ஷெட்டில் விஜயன் (வயது 55) என்பவர் நீண்ட வருடங்களாக அதே பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து அங்கேயே சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். இவரை போலவே பலரும் அந்தப் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று குட்செட் பகுதியில் பணிபுரியும் ஒருவர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து குட்செட் பகுதியில் தங்கியிருக்கும் அனைவரும் துக்கம் விசாரிப்பதற்காக இறந்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு சாப்பிடுவதற்காக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து செல்வம் தான் தங்கியிருக்கும் இடத்தில் தன்னுடைய உணவு பொட்டலத்தை வைத்துள்ளார். அதை வேறு ஒரு நபர் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சாப்பிடுவதற்காக செல்வம் தான் வைத்திருந்த உணவு பொட்டலத்தை தேடியுள்ளார்
அப்போது அந்த இடத்தில் அது இல்லை. பின்னர் அதை விஜயனிடம் கேட்டுள்ளார். அப்போது அதை வேறொருவர் சாப்பிட்டு விட்டார் என்று கூறி உள்ளார். மேலும் இந்த பிரச்சனை காரணமாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் விஜயன் அருகிலிருந்த கட்டையை எடுத்து செல்வத்தின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் செல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து பாலக்கரை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் விஜயன், செல்வத்தை கட்டையால் அடித்துக் கொன்று விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய விஜயனை வலைவீசி தேடி வருகின்றனர்.