Skip to main content

தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டம் அம்பலம்! மத்திய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
velmurugan



தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் டெல்லியின் நாசகாரத் திட்டம் அம்பலம்! இதற்கு முடிவுகட்ட தமிழ்நாடும் தமிழக அரசும் தயாராவோம் என கூறியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
 

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் (தேசங்கள்) இணைந்த ஒரு கூட்டாட்சி அமைப்புதான் இந்திய ஒன்றியம்.
 

இதில் மோடியின் பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை அரசியல் அதிகாரமற்ற உள்ளாட்சி அமைப்பு என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது.
 

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை உள்ளாட்சி அமைப்பு என்ற நிலையில்கூட அல்ல; தமிழ் என்ற ஓர் இன அடையாளமே கூடாது என்று, தனது நலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
 

அதற்காக அது செயல்படுத்திவரும் நாசகாரத் திட்டம் இப்போது அம்பலமாகியிருக்கிறது.



தமிழ்நாட்டின் உயிராதாரமான விவசாய மண்டலமாக இருக்கும் காவிரி பாசனப்பகுதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் முதலான நச்சு வேதிப்பொருள்களை எடுப்பதற்கான 700க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி மூலம் முடுக்கிவிட்டிருக்கிறது மோடி அரசு.
 

இதனால் தமிழ்நிலம் எதற்கும் ஆகாத பாழ்நிலமாக்கப்படும்; அப்போது வாழ்நிலமாக அதைக் கொள்ள முடியாத நிலையில் தமிழினமே ஒட்டுமொத்தமாக இடம்பெயரும்; அப்படியாக தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் போகும்; இப்படிக் கணக்குப் போட்டுத்தான் காரியத்தில் இறங்கியிருக்கிறது மோடி அரசு.
 

காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்பதற்கு மாறாக அதனை அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டத்தினை ஓஎன்ஜிசி மூலம் டெல்லி செயல்படுத்திக் கொண்டிருப்பது ஆதாரங்களுடன் இன்று தெரியவந்திருக்கிறது.
 

இது குறித்து காவிரி டெல்டா கண்காணிப்பகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து இந்த வஞ்சகத் திட்டம் வெளிப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் இருக்கின்றன; ஆனால் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.
 

71 கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன; அவற்றிற்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணம்.
 

ஆனால் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி மேலே சொன்ன எந்த கிணற்றுக்கும் இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை.
 

இப்படி சட்டவிரோதமாகச் செயல்படும் ஓஎன்ஜிசியால் தொடர்ந்து விபத்துகள், நச்சு எண்ணெய் கசிவுகள். அதனால் விளைநிலங்கள் பாழ்பட்டன; நீர்நிலைகள் மாசுபட்டன. 2011 – 2018 காலத்தில் 8 எண்ணெய் கசிவு சம்பவங்கள். எண்ணெய் கொட்டிய எந்த இடத்தையும் மீட்டெடுக்க முடியவில்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவண அறிக்கை. இதுபோல் பேரழிவு சம்பவங்கள் 2008லிருந்தே நடந்துவருகின்றன என்பதுதான் உண்மை; ஆனால் அப்போது விழிப்புணர்வு இல்லாததால் அவை தெரியவரவில்ல.
 

எந்த அனுமதியும் பெறாமல்தான் ஓஎன்ஜிசி இயங்கிவருகிறது என்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டிய பொது அமைப்பாக அது இருந்தும், சுற்றுச்சூழல் உரிமம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களைக் கேட்டால்கூட, ஏதாவது காரணங்களைக் காட்டி, அதைச் சொல்வதில்லை என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுகிறது.
 

ஆக, சட்டவிரோதமாகவே இந்த நாசகாரத் திட்ட தமிழ்நிலத்தில் செயல்படுத்தி வருகிறது மோடி அரசு.
 

இதற்கு முடிவுகட்ட தமிழ்நாடும் தமிழக அரசும் தயாராவோம் என அறைகூவி அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்