Skip to main content

தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு! ராமதாஸ்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

 

ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம்  அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்.... தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.
 

இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இலங்கை பொதுஜன கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவுக்கும், இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் புதல்வரும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது. இவர்கள்  இருவருமே தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்ற போதிலும், இந்த இருவரில் எவர் மிகவும் மோசமானவர், எவர் கொஞ்சம் மோசமானவர் என்ற அடிப்படையில் தான், அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கையில் வாழும் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.


 

pmk ramadoss



அதைப்போலவே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தமிழர்களின் நலன் காக்கப்படும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்படும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனால் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால் பிரேமதாசா தமிழர் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்பட்டார்.
 

அதற்கு மாறாக கோத்தபாயா ராஜபக்சே சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார்.  அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது. இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும்; போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட சிங்கள மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரச்சாரத்தையே கோத்தபாய முன்னெடுத்தார். அவரது இனவெறி பிரச்சாரம் தான் இப்போது அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.


 

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரைத் திட்டத்தை கோத்தபாய ராஜபக்சே அறிவித்த போதே, அவர் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை  விடுத்திருந்தேன். இப்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 2009-ஆம் ஆண்டு ஈழப் போரில்  ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள்  எவரும் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். போர்க்குற்றவாளியான கோத்தபாய  ராஜபக்சேவே அதிபராக வந்துள்ள நிலையில், எந்தவிதமான போர்க்குற்ற விசாரணையும் இனி நடக்காது. மொத்தத்தில் இதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.

 

இத்தகைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம்? என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகள்  இன்னொரு கள எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபாயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்கவில்லை; அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90% வாக்குகளும், மற்ற பகுதிகளில்  40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்கள் தனித் தீவாகவும், சிங்களர்கள் தனித்தீவாகவும் வாக்களித்திருப்பது இரு இனங்களும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதை அனைத்து உலக நாடுகளும் புரிந்து கொள்ள முயல வேண்டும்.


 

அதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவுவதற்கு  காத்திருக்கும் அடக்கு முறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம்  அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும். அதிபர் தேர்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை  பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித்தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.