
சென்னை பூக்கடை காவல்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரத்தன் பஜாரில் சுனில் என்பவர் வாடகைக்கு கடையெடுத்து மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் பேன்சி பொருட்களை 20 வருடங்களாக விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லட்சுமணன் என்பவருடன் சுனிலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. லட்சுமணன் பொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகராக செயல்பட்டு வரும் நிலையில் சுனிலுக்கு, ராஜேஷ் ஷா - மயூர் ஷா என்ற லில்லிபுட் சகோதரர்களை(ராஜேஷ் ஷா , மயூர் ஷா இருவரும் இயல்பான உயரத்தை விடக் குறைவாக இருப்பதால் மார்க்கெட்டில் இவர்களை லில்லிபுட் சகோதரர்கள் என்று அழைக்கிறார்கள்) அறிமுகம் செய்துவந்துள்ளார். இதையடுத்து, அந்த லில்லிபுட் சகோதரர்கள் சவுகார்பேட்டை பகுதியில் பாம்பே பலூன் ஹவுஸ் நடத்தி வருவதாகவும் அதற்காக கடந்தாண்டு தனக்கு பலூன் மொத்த விலைக்கு தேவைப்படுவதாகவும் கேட்டுள்ளனர்.
அதற்காக முதற்கட்டமாக ரூ.10 லட்சத்திற்கு பலூன் வாங்கியுள்ளனர். பிறகு அந்த பலூனிற்கான பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுனில் கடைக்கு வந்த லில்லிபுட் சகோதரர்கள் மீண்டும் பலூனை கடனாக கேட்டுள்ளனர். அதற்கு சுனில், ‘நீங்க ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கே பணம் கொடுக்கவே இல்லை. முதலில் அந்தத் தொகையை கொடுங்கள் பிறகு பார்க்கலாம்..’ என்றதும் உடனே ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு மீண்டும் ரூ. 45 லட்சத்திற்கு பொருட்களை பெற்றுக்கொண்டு பணத்தை கொடுக்காமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அந்த பணத்தை சுனில் திரும்பக் கேட்டதற்கு ரவுடிகளை வைத்து லில்லிபுட் சகோதரர்கள் கொலை மிரட்டல் விடுத்தும், தரக்குறைவாகவும் பேசியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுனில் சென்னை கமிஷ்னரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இன்று லில்லிபுட் சகோதரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.