
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே மாவுத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. கொடைக்கானலில் டிராபிக் போலீசாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கொடைக்கானலில் பணியின்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாலசுப்பிரமணி இருசக்கர வாகனம் நிலை தடுமாறி ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் காவலர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பலசுப்ரமணி உடல் உடல்கூராய்விற்கு பிறகு அவர் சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே உள்ள மாவுத்தன்பட்டிக்கு அடக்கம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்ட அவரது உடலை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா, கோடை டி.எஸ்.பி.சீனிவாசன். இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி உள்ளிட்ட போலீசார் எரியூட்டும் இடம் வரை சுமந்து வந்தனர். பின்னர் பாலசுப்ரமணி உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சக போலீசாரின் உடலை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் இணைந்து சுமந்து வந்து இறுதி மரியாதை செலுத்தியது அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.