Skip to main content

போட்டிக்கு ஆள் நிறுத்துவியா? வெட்டி சாய்க்கப்பட்ட 150 தென்னங் கன்றுகள்... எரிக்கப்பட்ட கொட்டகை!

Published on 25/12/2019 | Edited on 25/12/2019

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் என்றாலே பிரச்சனை மேல் பிரச்சனைகள் தொடர்வது வழக்கமாகிவிட்டது. வேட்பு மனு வாபஸ் பெறும் நாளால் அலுவலக மேஜை நாற்காலிகள் உடைப்பு மண்டை உடைப்பு சம்பவங்கள் நடந்து முடிந்து ஆளும் அதிமுக வின் வேட்பாளர் திமுகவில் இணைந்துவிட்டார்.

 

incident in pudukottai

 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து ஒரு பரபரப்பு.  தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் இவர் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு தண்டலை பகுதியில் உள்ளது. அந்த தோப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட  சுமார் 150 தென்னை கன்றுகள் இருந்தது. இந்த தோப்பை பராமரிப்பவர் அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன். இந்த பிரபாகரன் ஊராட்சி மன்றத் தேர்தலில் 4 வது வார்டு உறுப்பினருக்காக போட்டியிடுகிறார். அவரை போட்டியிலிருந்து விலகச் சொல்லி பழனிவேலிடம் சிலர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பிரபாகரன் வாபஸ் பெறவில்லை.

 

incident in pudukottai


இந்த நிலையில் தான் நேற்று இரவு பழனிவேலின் தென்னந் தோப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த சுமார் 150 தென்னங் கன்றுகளையும் வெட்டி சாய்த்துவிட்டு அருகில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் மோட்டாரையும் வெட்டி ஆழ்குழாய் கிணற்றிற்குள் தள்ளிவிட்டு மோட்டார் கொட்டகையையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் கொட்டகை தீ பற்றி எரிவதை கண்ட கிராமத்தினர் தோப்புக்குள் சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். ஊராட்சி செயலர் பழினிவேலுக்கு உதவியாக இருக்கும் பிரபாகரனை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார் என்ற கோபத்தில் பழனிவேலின் தென்னந்தோப்பு அழிக்கப்பட்டிருக்களாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

 

incident in pudukottai

 

மேலும் இதுகுறித்து ஊராட்சி செயலர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் ஊராட்சி செயலர் தோப்பு அழிக்கப்பட்டு மோட்டார் கொட்டகை எரிக்கப்பட்ட சம்பவம் மணமேல்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்