Skip to main content

எங்கள் தாய் மண்ணை தரமாட்டோம்... 42 கிராம மக்களின் தொடர் போராட்டம்...

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
nlc



 

நெய்வேலி என்.எல்.சி. 3வது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி சென்னையில் போராட்டம் நடைப்பெற்றது. 
 

இதில் கலந்து கொண்டவர்கள், 

 

தமிழ்நாட்டில் மின்சாரமும், வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்களின் நிலங்களைக் கொடுத்ததால் அமைக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் இப்போது அதன் நோக்கங்களைமறந்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக மக்களைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. 

 

ஏற்கனவே சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 என 3 நிலங்கரி சுரங்கங்களை என்.எல்.சி. அமைந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிலக்கரியில் தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலக்கரியை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டி வருகிறது. 

 

இவை போதாதென சுரங்கம் 3 என்ற பெயரில் நான்காவது சுரங்கம் அமைக்க முடிவு செய்து அதற்காக பெருமளவு நிலங்களைக் கையகப்படுத்த உத்தேசித்துள்ளது.

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இப்போது 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் மூலம் கிடைக்கும் நிலக்கரியில் குறிப்பிடத்தக்க அளவு வெளிநிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. 
 

nlc


 

அதுமட்டுமின்றி, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்த சில பத்தாண்டுகளில் என்.எல்.சி. நிறுவனம் அதன் மின்சார உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு அதிகரித்தாலும், அதற்குத் தேவையான நிலக்கரியை இப்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் நிலங்களில் இருந்தே பெற முடியும் இருக்கும்போது சுரங்கம் 3 அமைப்பதற்கான தேவை இல்லை.

 


புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தவுள்ள நிலங்களின் பரப்பு 12.125 ஏக்கர் ஆகும். இந்த நிலங்கள் தான் அப்பகுதிகளில் உள்ள 26 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. 

 

மலைக்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் விளையக்கூடிய இந்த நிலங்களில் இருந்து ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும். இவ்வளவு வளமான நிலங்கள் நிலக்கரி சுரங்கத்திற்காக பறிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க நேரிடும்.
 

ஏற்கனவே 1977ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படாத நிலையில், கூடுதலாக பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்க என்.எல்.சி. நிறுவனம் துடிப்பதும், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் துணை போதுவதும் மன்னிக்க முடியாதவை. 

 

அதனால்தான் சுரங்கம் 3 அமைக்கும் திட்டத்தையும் அதற்காக நிலங்களை பறிக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்று 42 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

 

ஆனால் என்.எல்.சி. நிறுவனமோ எந்தவித சமூகப் பொறுப்பும், அக்கறையும் இல்லாமல் நிலங்களை பறிக்க வேண்டும், நிலக்கரி சுங்கம் அமைத்து அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்கும் மக்களைச் சுரண்டும் கார்ப்பரேட்களுக்கும் வித்தியாசம் இல்லை.

 

தமிழகத்தின் வளங்களை சுரண்டி லாபம் பார்க்கும் என்.எல்.சி. நிறுவனம் நெய்வேலி பகுதி மக்களின் நலனுக்காக எதையும் செய்வதில்லை. என்.எல்.சி. நிறுவனத்தின் லாபத்திலிருந்து செலவழிக்கப்பட வேண்டிய சமூகப் பொறுப்புடைமை நிதியைக் கூட நெய்வேலி மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நலனுக்காக செலவிடாமல், அந்த நிறுவனத்தின் தலைவராக பதவி வகிப்பவர்களின் மாநிலங்களில் செலவிடும் அளவுக்கு அதன் மனசாட்சி இறுகிப் போயிருக்கிறது. 

 

இப்படிப்பட்ட நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நெய்வேலி பகுதியில்உ ள்ள 26 கிராம பஞ்சாயத்து மக்களின் வாழ்வாதாரங்களை இழக்க முடியாது. மாறாக நெய்வேலியில் சுரங்கம் 3 அமைக்கும் திட்டத்தை என்.எல்.சி. நிறுவனமும், தமிழக ஆட்சியாளர்களும் உடனே கைவிட வேண்டும் என்று கூறினர். 
 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்