Skip to main content

மழை, கடும் குளிர் தாங்காமல் 600 ஆடுகள் உயிரிழப்பு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

incident in kallakurichi sangarapuram

சமீப நாட்களாக பெய்துவரும் தொடர் மழை ஒரு பக்கம். அதேபோல் மழை இல்லாத நேரங்களில் கடும் பனிப்பொழிவு ஒருபக்கம். கடும் குளிர் மனிதர்களையும் அவர்கள் வளர்க்கும் ஆடு மாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள பாவலம் கிராமத்தில் 600 ஆடுகள் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

பாவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி கருத்த பிள்ளை. இவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆடுகள் வளர்ப்புத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களின் போது ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்வது வழக்கம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளையும் காப்பாற்றி வருகிறார்கள். இதற்காகவே வெயில், மழை பாராமல் காடு மேடெல்லாம் திரிந்து ஆடுகளை மேய்த்து வளர்த்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் (08/01/2021) பாவலம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தங்களது சுமார் 600 ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தனர். சங்கராபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (08/01/2021) பெய்த பலத்த மழையின் காரணமாக முசுகுந்த ஆற்றின் கரை ஓரப்பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ள நீரில் அடித்துச் சென்றன. மீதி இருந்த சுமார் 500 ஆண்டுகள் கடும் குளிர் காரணமாக உயிரிழந்தன. நேற்று காலையில் சென்று ஆடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதன் உரிமையாளர் பழனி கருத்த பிள்ளை கதறி அழுதார். இந்தத் தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.

 

அதேபோல், இதை அறிந்த சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு ஆடுகளை வளர்த்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அதிகாரிகளிடம் அவர்களுக்கான உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.