Skip to main content

பொதுமக்கள் பிரச்சனையின்றி எப்படி சாத்தியமாகிறது பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்..!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

How is the bus workers' strike possible without any public problem

 

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், திட்டமிட்டபடி இன்று (25 பிப்.) முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று சென்னையில் அறிவித்தது. அதன்படி இன்று முதல் தமிழகம் முழுக்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

 

ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சி, கரூர் மண்டலத்தில் 20 பணிமனைகள் உள்ளன. தினமும் 1,176 பேருந்துகள் இயங்கக் கூடிய நிலையில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயங்கி வருகின்றன. இரு மாவட்டங்களிலும்  மொத்தம் உள்ள 20 பணிமனைகளில் சேர்த்து 120 பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அதுவும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே பேருந்தை இயக்குகின்றனர். பொதுவாக பேருந்து ஸ்ட்ரைக் நடைபெறும் நாட்களில், பேருந்தை இயக்கக் கோரி போக்குவரத்து ஊழியர்களிடத்திலும், பணிமனை ஊழியர்களிடத்திலும் பயணிகள் பிரச்சனை செய்வார்கள். அரசும், ஸ்ட்ரைக் நடைபெறும் அன்று சில சமயங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கும். ஆனால், இன்று குறைந்த அளவிலான பேருந்துகளே இயங்கியும் பெரிதாக மக்கள் பிரச்சனை செய்யவில்லை. அதேபோல் பேருந்துகளிலும் காவல்துறையினர் யாரையும் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தவுமில்லை. 

 

எப்படி பொதுமக்கள் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என பேருந்து நிலையித்திலிருந்த சில பயணிகளிடம் விசாரித்தபோது, “கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே டிரைவர்களும், கண்டக்டர்களும் தினசரி பயணிகளிடமும், பொதுவாகப் பயணம் செய்வோரிடத்திலும், 25ஆம் தேதி முதல் பேருந்துகள் பெரும் அளவில் இயங்காது. ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய செட்டில்மெண்ட் மற்றும் சில பணபலன்களைப் பலமுறை கேட்டும் அரசு முறையான நடவடிக்கை எடுக்காததால் இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். அதிமுகவின் ஆட்சியும் இன்னும் சில மாதங்களில் முடியப்போகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்குப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் எடப்பாடி அறிவித்து வருகிறார். ஆனால், எங்களுக்குக் கிடைக்க வேண்டியதை நாங்கள் கேட்டும் கொடுக்க மறுக்கிறார்கள். இந்த ஆட்சி முடிந்து, அடுத்த ஆட்சி வரும்போது அதன் மீது பெரும் கடன் சுமையை வைத்துள்ளனர். அதனால், அவர்களும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா என்பது தெரியாது. நாங்களும் குடும்பம், குழந்தைகள் அவர்களின் எதிர்காலம் என அனைத்தையும் பார்க்க வேண்டும். அதனால், இந்த வேலை நிறுத்தம் நிச்சயம் நடைபெறும். அதனால், தேவையற்ற பயணத்தைத் தவிருங்கள். இயங்கும் குறைவான பேருந்துகளில் அவசிய பயணிகள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என முன்கூடியே தெரிவித்தனர்” என்றனர். 

 

பொதுவாக ஸ்ட்ரைக் காலத்தில் பொதுமக்களின் சிரமத்தாலும், அவர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளாலும் தற்காலிகமாக ஸ்ட்ரைக் வாப்பஸ் வாங்கிவிட்டு வழக்கம்போல் அனைத்தும் செயல்படும். ஆனால், இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்றும், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் தொழிலாளர்கள் இதுபோன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் என்கின்றனர் காலை பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்திற்குள் குடை பிடித்தபடி பயணம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

People travel with umbrellas inside the bus!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (19-11-23) காலை 11 மணி அளவில் அத்திமரப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று மழை பெய்ததால் பேருந்து மேற்கூரை வழியே பேருந்தின் உள்ளே மழை நீர் பெய்தது. 

 

இதனால், அவதியடைந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும், பேருந்தின் ஓரமாக நின்று கொண்டும் பயணம் செய்தனர். இன்னும் சில பயணிகள் பேருந்திற்குள் குடை பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். இதில் அவதியடைந்த மக்கள் கூறியதாவது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருக்கிறது. இதனால், அந்த பேருந்திற்கு பதில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

Next Story

அரசுப் பேருந்து நடத்துநர் மோசடி! 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

Government bus conductor fraud!

 

கடலூர் மாவட்டம், வடலூர், ஊமங்கலம் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் டிக்கெட் பரிசோதகர்கள் மழவேந்தி, உத்திராபதி ஆகியோர் பேருந்தை வழிமறித்து ஏறினார்கள். அப்போது அவர்கள் பயணிகளின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்து சீரியல் எண் சரி பார்த்தபோது அந்த டிக்கெட் பழைய டிக்கெட் எனத் தெரியவந்தது.

 

பின்னர் பேருந்தில் இருந்த அனைத்துப் பயணிகளிடமும் டிக்கெட்டை பரிசோதித்துள்ளனர். இதில் பெரும்பாலான பயணிகளிடம் இருந்த டிக்கெட் ஏற்கனவே பயணம் செய்தவர்களின் டிக்கெட் என்றும் இது பழைய டிக்கெட் என உறுதியானது. இதனால் டிக்கெட் பரிசோதகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பின்னர் பேருந்து நடத்துநரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறினார். அதன் காரணமாக அவரது பணப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த டிக்கெட் பழைய டிக்கெட் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில், சிதம்பரம் பேருந்து நிலையம் வந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சத்தியமூர்த்தி மற்றும் நடத்துநர் நேரு ஆகிய இருவரையும் சேலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.

 

இவர்கள் நடத்திய விசாரணையில், நடத்துநர் பழைய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்ததால் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளனர். இந்த மோசடியில் ஓட்டுநர் சத்தியமூர்த்திக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தொடர்பு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.