
பழமைவாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குப் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி வீ.பாரதிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பத்திரிகையாளர் மன்ற துணை விதிப்படி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நவம்பர் 18-ம் தேதி நான் நியமிக்கப்பட்டேன். தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை ஆகும். அந்த வகையில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்வாகிகளையும், 5 செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி முடிவடையும். தினமும் (ஞாயிறு விடுமுறை தவிர) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் டிசம்பர் 9-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசீலிக்கப்படும். டிசம்பர் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
என்னிடம் வழங்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியல்படி, மொத்தம் 1502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் முடியும். தேர்தலின்போது, உறுப்பினர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட அடையாள அட்டையை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உறுப்பினர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படங்கள் - எஸ்.பி.சுந்தர்