
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உள்ள சாலையோரத்தில் காரை நிறுத்திட்டு சிலர் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். அதாவது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் பாய், நீலா, ரமேஷ் மற்றும் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 8 பேர் ஆவர். இவர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊரான குஜராத் மாநிலத்திற்குத் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தான் சாலையோரம் இருந்த நிழலலில் காரை நிறுத்திட்டு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதே சமயம் கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று இந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் சாலையோரம் இருந்த சுமார் 10 அடி பள்ளத்தில் அந்த கார் விழுந்தது. இதன் காரணமாக காருக்கு உள்ளே இருந்த 3 பேர் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர். காரின் மேலே இருந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 பேரும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த 6 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.