
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதியின் மகளும், அதிமுகவின் புரட்சித்தலைவிப் பேரவைத் துணைச் செயலாளர் ஆற்றல் அசோக் குமாரின் மனைவியுமான கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கருணாம்பிகை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கருணாம்பிகை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்ற மகளை இழந்து வாடும் சரஸ்வதிகும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே போன்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் பாசமிகு மகளும், அதிமுக புரட்சித்தலைவிப் பேரவைத் துணைச் செயலாளர் ஆற்றல் அசோக்குமாரின் அன்புத் துணைவியாருமான, கருணாம்பிகா காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரை இழந்து வாடும் சரஸ்வதிக்கும், அன்புச் சகோதரர் ஆற்றல் அசோக்குமாருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த கருணாம்பிகாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன” எனத் தெரிவித்துள்ளார்.