
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் இன்று (08.06.2025) நடைபெற்ற பாஜக நிர்வாகிகளுக்கான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 2026ஆம் ஆண்டு தேர்தல் பா.ஜ. க.வின் ஒவ்வொரு தொண்டருக்கும் மிக மிக முக்கியமான உயிர்ப்பான அவசியமான ஒரு களமாகும். 2024ஆம் ஆண்டும் நமக்கெல்லாம் மிக முக்கியமானது. அப்போதுதான் பிரதமர் மோடி 3வது முறையாக இந்த நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார். 2024இல் தான் ஒரிசா மாநிலத்தில் முழு பலத்தோடு முழு மெஜாரிட்டியோடு (பெரும்பான்மையோடு) பா.ஜ.க.வின் ஆட்சி அமைந்தது. அதேபோல ஹரியானாவிலும் 3வது முறையாக மிகப்பெரிய வெற்றி பதிவு செய்யப்பட்டது. அதேபோல மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்தது.
2025ஆம் ஆண்டும் மிகப்பெரிய சாதனை செய்யப்பட்டது. டெல்லியில் அரவிந்த் கெஜரிவால்ஆட்சியோடு சேர்த்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறது. 2025இல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ அதேபோல 2026இல் தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி கண்டிப்பாக மலரப்போகிறது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் 2026ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு ஆட்சியில் இருக்கிற திமுக ஊழல்... ஊழல்.... ஊழல்... என்று ஊழலில் தான் திளைத்துக் கொண்டிருக்கிறது. திமுகவின் ஆட்சியின் போது மத்திய அரசிலிருந்து பிரதமர் மோடி ஏழை மக்களுக்காகக் கொடுக்கும் பணத்தைக் கூட மக்களின் நலனுக்காகச் செலவிடாமல் அந்த பணத்தை எல்லாம் மடை மாற்றி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைக் கிடைக்காமல் செய்வதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குத் திமுக ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தால் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சத்தாலும் அவர்கள் வாழ முடியாத சூழலில் அவர்கள் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காத சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக்கில் ஊழலைச் செய்து இங்கே சட்டவிரோதமாக ஊழல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு நூற்றுக்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசாகக் காட்சி அளிக்கிறது. திமுக அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கெல்லாம் வாக்குறுதி பட்டியல் கொடுத்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதி பட்டியலில் 10 % கூட நிறைவேற்றவில்லை. ஆனால் அவர்கள் 90% நிறைவேற்றியதாகக் கூறிக்கொள்கிறார்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால் உங்களுடைய தேர்தல் வாக்குறுதி பட்டியலை எடுத்துக்கொண்டு வாருங்கள். அதைப் பார்த்துச் சொல்லுங்கள். நீங்கள் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று. கள்ளச்சாராயத்தினாலும் தமிழ்நாட்டு அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்” எனப் பேசினார்.