
தி.மு.க.வின் பொதுக்குழு எப்போதுமே சென்னை அறிவாலயத்தில்தான் நடைபெறும். தி.மு.க.வின் 75 வருட வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே மதுரையில் பொதுக்குழு நடைபெற்றது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மதுரையில் ஜூன் 1ம் தேதியன்று மீண்டும் பொதுக்குழு நடைபெற உள்ளது.
இந்த பொதுக்குழு ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தியின் கையில் ஒப்படைத்துள்ளது திமுக தலைமை. இதன் எதிரொலியாக மதுரை நகரெங்கும் தி.மு.க. கொடிகள் பறக்கின்றன. நிகழ்ச்சி நடைபெறும் ஒத்தக்கடை பகுதியில் அறிவாலய மாடலில் மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்படுகிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து பகுதிச் செயலாளர்களில் ஆரம்பித்து, அனைத்து அணியைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் என 10,000 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இந்த பொதுக்குழுவில் பங்குபெறுவார்கள்.
பொதுக் குழுவில் பங்கேற்க முதல் நாளே முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். மதுரை மேற்கு, மத்தி, வடக்கு தொகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இந்த ரோடு ஷோ முதல்வரின் அண்ணன் அழகிரி இருக்கும் பகுதியில் தொடங்கி முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா, மூக்கையா தேவர் மணிமண்டபம் துவக்க விழா நிகழ்ச்சி என நீள்கிறது.
இதுகுறித்தது நாம் அழகிரி வட்டாரத்தில் விசாரித்தோம். அழகிரியைப் பொறுத்தவரை தனக்கு வயதாகிவிட்டது. "நான் கலைஞர் மகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன். தம்பி கட்சியையும் ஆட்சியையும் நன்றாகவே நடத்துகிறார்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். அதேவேளையில் தற்போது மதுரையில் நடக்கும் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக அழகிரியை அழைக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் தி.மு.க. கட்சிப் பணியைத் தொடரவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற பேச்சும் தி.மு.க.வினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
இதையடுத்து, அழகிரியின் தீவிர ஆதரவாளர் இசக்கிமுத்துவைத் தொடர்பு கொண்டோம். "அழகிரி அண்ணன் சென்னையிலிருந்து திடீரென மதுரை வீட்டிற்கு வந்தார். எங்களுக்கெல்லாம் அழைப்புவிடுத்தார். நான், முபாரக் மந்திரி, மன்னன், உதயகுமார் என அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்துப் பேசினோம். தம்பி துரையின் நலம் குறித்து கேட்டறிந்தோம். மற்றபடி அரசியல் பேசவில்லை. அண்ணனிடம், தி.மு.க. தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் துரைமுருகனிடம் கொடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. தலைமையிடத்திலிருந்து அழைப்பு வரவில்லையே என்றதும் எல்லாம் நல்ல செய்தி வரும். நீங்கள் கட்சிப் பணியை ஆற்றுங்கள் என்றார்.
எனக்கு 78 வயதாகி விட்டது. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. தற்போது தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய அளவிலுள்ள பெரிய தலைவர்களும் போற்றும் தலைவராக உருவெடுத்து நிற்கிறார். பா.ஜ.க. நெருக்கடி சூழ்ந்துநிற்கும் இந்த சமயத்தில் கட்சிக்காகப் பணியாற்ற தயாராக இருக்கும் எங்களைப் போன்றோர்களை அரவணைத்து அழைத்துச்செல்வார் என்று காத்திருக்கோம்'' என கண்கலங்கினார் இசக்கிமுத்து.
தி.மு.க.வைச் சேர்ந்த தியோபால் நம்மிடம், “வருகிற ஜூன் 1-ஆம் தேதிதான் பொதுக்குழு கூட்டம். பணிகள் எப்படி நடைபெறுகிறது என்று பார்க்கவந்தேன். அண்ணன் மூர்த்தியைச் சுற்றி இளைஞர் பட்டாளம் அதிகளவில் இருக்கிறது. உதய் அண்ணா வந்தபிறகு இளைய ரத்தம் பாய்ச்சியாச்சு. கருத்தாழமிக்க இளைய தலைமுறையினர், பேச்சாளர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வுக்கு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்திய அளவில் பெரிய நெட்வொர்க்கை வீழ்த்துவதற்கான சரியான ஆயுதம் தி.மு.க.தான். அமைச்சர் மூர்த்தியை தென்மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்தால் கட்சி இப்பகுதியில் இன்னும் வேகமெடுக்கும். மதுரையைப் பொறுத்தவரை 10/10 நிச்சயம். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவே மதுரை மேற்கு வேண்டாம் என்று மூர்த்திக்குப் பயந்து தொகுதி மாறுகிறார். அந்தளவுக்கு பயம் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார்.
அடுத்து பேசிய தி.மு.க.வைச் சேர்ந்த பழனி, "தி.மு.க. கட்சி ஆரம்பித்து இதுவரை இரண்டு பொதுக்குழு மதுரையில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் தி.மு.க. எழுச்சிபெற்றுள்ளது. மூன்றாவது முறையாக மதுரையில் பொதுக் குழு நடக்கிறது. இது பெரும் மாற்றத்தைத் தரும். டெல்டா மாவட்டங்கள், சென்னை போன்ற இடங்களில் தி.மு.க. எப்போதுமே தன் செல்வாக்கை நிலை நிறுத்தி வைத்துள்ளது. தலைமை தென்மாவட்டத்தைக் குறிவைத்து இறங்கியுள்ளதாகவே இதைப் பார்க்கிறோம். இளம் தலைமுறையினருக்கு திராவிட சித்தாந்தத்தைக் கடத்தவேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம். அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் செந்தில்பாலாஜி போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு களவீரன் இருந்தால் தி.மு.க.வை எந்த சக்தியாலும் நெருங்கமுடியாது. இதேபோன்று தி.மு.க.வின் நூற்றாண்டுக் கொண்டாட்டமும் மதுரையில் நடக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார் உற்சாகமாக.
இந்த சூழலில், பொதுக்குழுவிற்கு ஒருநாள் முன்பு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய அண்ணனான அழகிரி வீட்டுக்கு விருந்துக்கு செல்கிறார். பல ஆண்டுகள் கழித்து அழகிரியும் ஸ்டாலினும் கைகோர்ப்பதால்.. இது திமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.