
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகர் ராஜேஷ் இன்று காலமாகியுள்ளார். இவர் நடிகரக மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் கால் பதித்து அதில் சிறந்தும் விலங்கியிருக்கிறார் என்பது அவரது பயணம் உணர்த்துகிறது. அந்த பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1949ல் பிறந்த இவர், தனது பள்ளி படிப்பை தேனியில் முடிக்கிறார். பின்பு அடுத்தகட்டமாகக் கல்லூரி படிப்பை தொடர்வதற்காக சென்னை வருகிறார். அங்கு ஒரு தனியார் கலை கல்லூரியில் படித்த அவர் பட்டபடிப்பை முடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.

ஆசிரியராக பணியாற்றிய போது அவருக்கு திரைத்துறையில் பணியாற்றவே ஆசையாக இருந்துள்ளது. அதனால் தனது கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்த அவர், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சுஜாதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அதில் சில காரணங்களால் நடிக்கவில்லை. இருப்பினும் ஆசிரியர் பணியை தொடர்ந்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து பாக்கியராஜ் திரைக்கதை அமைத்து பாலகுரு இயக்கிய ‘கன்னிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பின்பு சில படங்களில் நடித்த இவருக்கு பாக்கியராஜ் இயக்கி நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படம் முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் இவரது இமேஜை உயர்த்தியது. தொடர்ந்து நாயகனகாக ‘அனல் காற்று’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘சங்க நாதம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். இடையே ‘தனிக்காட்டு ராஜா’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘தாய் வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய மற்றும் துணை கதாபாத்திரத்திரங்களிலும் நடித்தார். இப்படி ரஜினி, கமல், பாக்கியராஜ் என அன்றைய தலைமுறையின் பல நடிகர்களோடு நடித்த இவர், நடித்த அனைவரிடமுமே நல்ல பண்புள்ள நடிகர் என்ற பெயரை பெற்றார்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடிகர்களான ‘நேருக்கு நேர்’, ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘சாமி’ என விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடனும் பயணித்தார். பின்பு அடுத்த கட்ட நடிகர்களான ரவி மோகனுடன் ‘மழை’, ஜீவாவுடன் ‘ஈ’, பரத்துடன் ‘சேவல்’ உள்ளிட்ட நடிகர்களோடும் நடித்து தனது பயணத்தை தொடர்ந்தார். குறிப்பாக 2014ஆம் ஆண்டு கெத்து தினேஷ் நடித்த ‘திருடன் போலீஸ்’ படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இன்றைய தலைமுறையினரிடம் இவரை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் காலேஜ் பேராசிரியராக நடித்தது முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சேரன் நடித்த ஆட்டோகிராஃப் படத்திலும் ஆசிரியராக தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அதுவும் இவரது திரை பயணத்தில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அவர் முன்பு ஆசிரியராக பணிபுரிந்ததின் விளைவாக இருக்கக்கூடும் என சினிமா வட்டாரங்கள் சொல்கிறார்கள். இதையடுத்து அவர் நடித்த கடைசி படமாக அமைந்தது விஜய் சேதுபதி நடிப்பில் 2024ஆம் ஆண்டு நடித்த ‘மெரி கிறிஸ்துமஸ்’.

தமிழை தவிர்த்து தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பு பயணத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். இடையே சில படங்களில் டப்பிங் கலைஞரகவும் தொடர்ந்திருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டும் அல்லாது சின்னதிரையிலும் தனது கால் பதித்த அவர், அதில் பல்வேறு முன்னணிதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து வீடுகளிலும் இடம் பிடித்தார். இவர் மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை தாண்டி இலக்கியம், ஜோதிடம், ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளிலும் தனது ஆர்வத்தை தீவிரமாக செலுத்தி தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்திய அவர், குறிப்பாக ஜோதிடத்தில் அதிக ஆர்வம்மிக்கவராக இருந்துள்ளார். இது தொடர்பாக சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். வெள்ளித்திரை, சின்னத்திரை தாண்டி இன்றைய காலகட்டத்தின் முக்கிய திரையான யூட்யூபிலும் தனது பயணத்தை மேற்கொண்டார். ஓம் சரவண பவ யூட்யூப் சேனலில் ஜோதிடம் ஆன்மீகம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருந்தார். அதோடு நக்கீரன் யூட்யூப் சேனலில் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து நேர்காணல் செய்திருந்தார். மேலும் தனது வாழ்க்கை பயணத்தில் முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மனம் திறந்து பகிர்ந்து வந்திருந்தார். தொடர்ந்து தனது உடல்நலத்தில் மிகுந்த கவனத்துடன் இருந்து வந்தார். உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்த பொருளையும் அவர் உட்கொண்டதில்லை என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு யாரை சந்தித்தாலும் அவரது உடல்நலத்தில் அக்கறை கொண்டு சில அறிவுரைகளும் வழங்குவதாக கூறப்படுக்கிறது.
சினிமா, இலக்கியத்தை தொடர்ந்து ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழிலிலும் கால் பதித்திருக்கிறார். சில ஆண்டுகள் அதிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். 1985 ஆம் ஆண்டு சென்னை கே.கே. நகர் அருகே திரைப்பட படப்பிடிப்புக்காக ஒரு பங்களாவைக் கட்டிய முதல் தமிழ் நடிகர் இவர்தான். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் இந்த பங்களாவைத் திறந்து வைத்தார். தொழில் அதிபர் மட்டுமல்லாது அரசியலில் இவரது பயணம் நீண்டுள்ளது. மார்க்ஸியம் மற்றும் திராவிடம் கொள்கையை ஏற்றுக் கொண்டார்.

இவரது கலை பயணத்தை பாராட்டி அதை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமித்தது. தனது பயணத்தில் இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தார். இப்படி சினிமா, இலக்கியம், பிஸுனஸ், என பல்வேறு துறைகளில் தனது ஆளுமையால் இயங்கி வந்த ராஜேஷின் 75வது பிறந்தநாளை நக்கீரன் குழுமம் சார்பாக கடந்த ஆண்டு விழா எடுத்து சிறப்பித்திருந்தோம். தொடர்ந்து பல்வேறு துறைகளில் தகவல் களஞ்சியமக பயணித்த ராஜேஷ் தனது இறுதி பயணத்தை இன்று முடித்துக் கொண்டார். மூச்சு திணறல் காரணமாக அவர் பயணம் முடிவுக்கு வந்தது. அவருக்கு வயது 76. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். மனைவி 2012ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.