Skip to main content

“ஆசை நிறைவேறாமலும் போகலாம்” - ராமதாஸ் கலகல பேட்டி!

Published on 08/06/2025 | Edited on 08/06/2025

 

Ramadoss says Wishes may not come true

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்து பேசியிருந்தார். ராமதாஸ் -அன்புமணி சந்திப்பைத் தொடர்ந்து குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்திருந்தனர். இதனையடுத்து தைலாபுரம் தோட்டத்தில் இருந்து  ராமதாஸ் நேற்று (07.06.2025) சென்னை வந்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று (08.06.2025) ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “வளர வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இந்த தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என பாமக தொண்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை உள்ளதே?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ராமதாஸ், “அது  சரி செய்யப்படும். சரி செய்யப்படும். சரி செய்தால் தான தேர்தலைச் சந்திக்க முடியும்.” எனப் பதிலளித்தார். ‘இதனைச் சரி செய்வதற்காகத்தான் இந்த பயணமா?’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அது மட்டுமில்லை. நான் நேற்று சொன்னது போன்று பல் வலி காரணமாக மருத்துவரைப் பார்க்கச் சென்னை வந்துள்ளேன்” என ராமதாஸ் பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர், “மத்திய அமைச்சர் அமித்ஷா இன்றைக்கு மதுரை வந்துள்ளார். அப்போது அவர் அதிமுக தலைமையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று சொல்லியுள்ளார்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ராமதாஸ், “சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்” எனத் தெரிவித்தார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்பு இருக்கா? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “அதெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. அவர் முதலில் சொன்னது தான் சரி” எனப் பதிலளித்தார்.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என அமித்ஷா பேசியுள்ளார். இதனை நீங்கள் எப்படி எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “அதாவது இப்போது எதைப் பற்றியும் எந்த கட்சியைப் பற்றியும் குறை சொல்வதற்கான நேரம் அல்ல. நேரம் வரும் போது எந்த கூட்டணி என்ற போது சொல்ல வேண்டிய கருத்துக்கள்” எனக் கூறினார். நீங்கள் நல்ல செய்தி வரும் என்று மதியமே சொன்னீர்கள். வியாழக்கிழமை நல்ல செய்தி வந்து விடுமா?. அப்போது நீங்களும், அன்புமணியும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு, “நீங்க விரும்புகிறீர்கள் இல்லையா. உங்களுடைய ஆசை நிறைவேறலாம். நிறைவேறாமலும் போகலாம்” எனச் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்