Skip to main content

‘களிமண்ணால் தயாரிக்கப்பட்ட ஆடுகளைப் பலியிடுங்கள்’ - முஸ்லிம்களுக்கு இந்து அமைப்பு கோரிக்கை!

Published on 04/06/2025 | Edited on 04/06/2025

 

Hindu organization requests Muslims Sacrifice sheep made of clay

பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது களிமண்ணில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடுகளை வெட்டுமாறு ஒரு இந்து அமைப்பு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம், போபால் நகரில் ‘சமஸ்கிருத பச்சாவ் மன்ச்’ என்ற இந்து அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் திவாரி, சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்து பண்டிகைகளான ஹோலி, தீபாவளி மற்றும் கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்களை கொண்டாடுவது போல், பக்ரீத் போன்ற முஸ்லிம் பண்டிகைகளை ஆடுகளை வெட்டாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது போல் கொண்டாட வேண்டும் என்று நாட்டில் உள்ள பல முஸ்லிம் மத குருக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சந்திரசேகர் திவாரி, “சமஸ்கிருதி பச்சாவ் மன்ச், கடந்த நான்கு ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகையன்று ஆடுகளைப் பலியிடுவதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணால் ஆன ஆடுகளைத் தயாரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு ஆட்டுக்கு ரூ.1,000 விலை நிர்ணயம் செய்துள்ளோம். தீபாவளி, ஹோலி மற்றும் கணேஷ் சதுர்த்தியின் போது களிமண் சிலைகளை சிலைகளைச் செய்து மூழ்கடித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதிரி விழாக்களைக் கொண்டாடி வருகிறோம். அது போன்று சுற்றுச்சூழலுக்கு உகந்த ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளைக் கொண்டாட முடியாதா?. ஆடுகளைப் பலியிடும் போது ரத்தத்தை சுத்தம் செய்ய ஏராளமான தண்ணீர் வீணாக்கப்படுகிறது.

நாங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியை ஒரு ஒளிரும் விளக்குடன் கொண்டாடத் தொடங்கினோம். எங்கள் வீட்டில் களிமண்ணால் துர்கா சிலைகள் மற்றும் விநாயகர் சிலைகளைச் செய்து, குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் மூழ்கடிக்கத் தொடங்கினோம். எனவே, பொறுப்பு சமூகத்தின் மீது உள்ளது. இதில் எந்த சர்ச்சையும் இல்லை, நாங்கள் எங்கள் நேர்மறையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். யாரும் வன்முறையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் அவர்கள் மீதும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு பாரத மாதாவின் நான்கு வீரர்களான இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் உள்ளது. இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பொறுப்பு. அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம், மேலும் இது தொடர்பாக ஒரு நேர்மறையான செய்தி தெரிவிக்கப்படும் வகையில் முஸ்லிம் மத குருவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்