Skip to main content

சட்டமன்ற தேர்தல் கூட்டணி; மா.செ கூட்டத்தில் தலைமைக்கு தே.மு.தி.க.வினர் வலியுறுத்தல்!!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Want to make alliance with dmk.. dmdk members

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திருமணத்துக்கு கடந்த வாரம் வந்த பிரேமலதா விஜயகாந்த், அந்த திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதுபோல் இந்த நிமிடம் வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம்.” என்று கூறிவிட்டுச் சென்றார்.

 

இந்த நிலையில்தான், கடந்த 13ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க.வின்  மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து  மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வந்தும்கூட, உடல்நிலை சரியில்லாததால் பேசவில்லை. ஆனால், கட்சியின் பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “கடந்த தேர்தல்களில் நடந்த தவறை இம்முறை செய்யமாட்டோம். இது தே.மு.தி.க.விற்கு ஒரு நெருக்கடியான தேர்தல். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் பறித்துவிடும். எனவே தேர்தல் கூட்டணி அமைப்பதில் கவனமுடன் இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் சீட்டு வழங்கும் கட்சியுடன்தான் இம்முறை கூட்டணி அமைக்கப்படும்.” என அதிரடியாக அறிவித்தார். “அதோடு கடந்த காலங்களில் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த முறை அப்படி ஏற்படாது. ஜனவரியில் நடக்கும் செயற்குழு பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார். நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழும் வகையில் கூட்டணி முடிவு இருக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கும் விஜயகாந்த் வருவார்” என்று கூறினார்.

 

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்ன பிரேமலதா விஜயகாந்த், திடீரென ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று சொல்வதற்கு என்ன காரணம் என ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்றுவந்த பல தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களிடம் கேட்டபோது, தமிழகத்தில் உள்ள 64 மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் மூன்று மணி நேரம் நடந்தது. முதலில் பிரேமலதா பேசும் போது, உங்கள் தொகுதியில் உள்ள தேர்தல் பணிகள் மற்றும் பேரூர் கிளை, நகரம், ஒன்றிய பகுதிகளில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் வரும் தேர்தலில் என்ன நினைத்திருக்கிறார்கள் அதுபோல் நீங்களும் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்லுங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து தான் சில மாவட்ட செயலாளர்களும்கூட, அ.தி.மு.க. வுடன் பா.ம.க. பாஜக.  கூட்டணி இருப்பதால் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டாம் தனித்துகூட நின்று விடலாம். அ.தி.மு.க. கூட்டணியில் நமக்கு மரியாதையும் இல்லை மதிப்பதும் இல்லை என்று  கூறினார்கள். ஆனால் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களோ, இந்த முறை தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தான் நல்லது எங்களைப் போல் உள்ள கட்சி பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர்களாக தி.மு.க. பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் அதைத்தான் மாவட்ட பொறுப்பாளர்களும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். 

 

ஒரு கூட்டம் என்று  நடத்தினார்கள் என்றால் கூட்டணிக் கட்சியினரை மதித்து மேடையில் அமர வைக்கிறார்கள். அந்த அளவுக்குக் கூட்டணி கட்சியினருக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வில் தேர்தல் நேரத்தில் மட்டும் நம்மைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை. அமைச்சரையோ, சட்டமன்ற உறுப்பினரையோ நாடிச்சென்று ஏதாவது உதவி கேட்கப் போனால்கூட போங்க பார்க்கலாம் என்று கூறுகிறார்களே தவிர எந்த உதவியும் இதுவரை செய்ததில்லை. நம்மையும் கண்டு கொள்வதில்லை. 

 

அப்படிப்பட்ட ஆளுங்கட்சியினருடன் மீண்டும் கூட்டணி வைப்பது என்பது நமது கட்சி வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் நம் கட்சியையும் வளர்க்க முடியும் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும்  தொண்டர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கூறினோம். இதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட பின்புதான் பிரேமலதா, அதிரடியாக ஜனவரியில் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி கூட்டணி அறிவிக்கப்படும் என்று சொன்னது. இது எங்களுக்கு எல்லாம் ஒரு புது தெம்பை உருவாக்கியிருக்கிறது.

 

ஆனால், கடந்த தேர்தலில் இதேபோல் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் என்ன முடிவை எடுத்தார்களோ? தெரியவில்லை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விட்டனர்.  ஆனால், இந்த முறை 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களுமே அந்தந்த மாவட்டத்தில்  உள்ள பொறுப்பாளர்கள் தொண்டர்களின் கருத்தைத் தெள்ளத் தெளிவாகவே வெளிப்படுத்தி தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூடியிருக்கிறோம். 

 

அதனடிப்படையில் வரும் சட்டமற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.