Skip to main content

சிவகாசி: திமுக உள்ளடிகளால் திணறும் காங்கிரஸ்!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Sivagasi Constituency congress and admk computation


நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம். சிவகாசி தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, சிவகாசி தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ:

 

லட்சுமி கணேசன் (அதிமுக)  -  அசோகன் (காங்கிரஸ்)


தொடர்ந்து 10 வருடங்களாக அமைச்சரின் தொகுதியாக இருந்துவரும் சிவகாசி, ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறியதால், தற்போது வி.ஐ.பி. தொகுதி கிடையாது. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிவகாசி முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் அசோகனும், அதிமுக வேட்பாளராக திருத்தங்கல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் லட்சுமி கணேசனும், போட்டியிடுகின்றனர். இவ்விருவருமே நாடார் சமுதாயத்தைச் சேர்தவர்கள். அமமுக வேட்பாளராக சாமிக்காளை களமிறங்கியிருக்கிறார். 

 

வாக்காளர் எண்ணிக்கையில் தொகுதியில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடார் சமுதாய வாக்குகள், இருவரில் யாருக்கு சாதகமாக உள்ளன?

 

கடந்த 21ஆம் தேதி, மண்டபம் ஒன்றில் 48 நாடார் தெருக்கட்டுகள் ஒன்றிணைந்து கூட்டம் நடத்தி, அசோகனை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளனர். ஏனென்றால், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அசோகன் மட்டுமே நாடார்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் வாக்கு வங்கி, இவ்வேட்பாளருக்கு பலம் சேர்க்கிறது. சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்காமல், அசோகனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கூடுதல் பலம். கடந்த 6 வருடங்களாக,  பட்டாசுத் தொழில் தடுமாற்றம் கண்டு, தற்போது முடங்கிப் போனதால், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை, காங்கிரஸ் அறுவடை செய்ய முயற்சிக்கிறது.

 

சிவகாசி தொகுதியில், நாடார்களுக்கும் தேவர் சமுதாயத்துக்குமான இடைவெளி, அசோகனைத் தள்ளிவைத்துப் பார்க்கிறது. சிவகாசி தொகுதியில் திமுக நிர்வாகிகள் பலரும் தேவர் சமுதாயத்தவரே. தோழர்களும், சிறுத்தைகளும் தரும் ஒத்துழைப்பு, காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக தரப்பிலிருந்து சரிவர கிடைக்கவில்லை.

 

‘அப்பாய்ன்மெண்ட்’ இல்லாமல் சந்திக்க முடியாத, ஏஸி அறையிலேயே பழக்கப்பட்ட ‘முதலாளி’ என்பதால், தலைவர் சிலைகளுக்கு மாலை போடும்போது, அசோகனுக்கு வியர்த்து விறுவிறுத்து, பெரிதாக மூச்சு வாங்குவது ஒரு குறையாகப் பேசப்படுகிறது. ராஜேந்திரபாலாஜி போட்டியிடாத தொகுதி என்பதால், திமுக மேலிடமும்கூட பாராமுகமாக உள்ளது.

 

தொகுதி சாதகமாக இல்லை என்பதால்தானே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறினார்? இதுவே, அதிமுக வேட்பாளர் லட்சுமிக்கு பெரிய மைனஸ். ஆனாலும், ‘சிவகாசியில் அதிமுக வெற்றிபெறாவிட்டால், அது தனக்கு ஏற்பட்ட தோல்வியே..’ என்பதை அறிந்துவைத்திருக்கும் ராஜேந்திரபாலாஜி, ஒரு தன்மானப் பிரச்சினையாக தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, சகல அஸ்திரங்களையும் ஏவி இந்தத் தொகுதி மீது தனி கவனம் செலுத்திவருகிறார். தேர்தல் தட்பவெப்பத்துக்கு ஏற்றவாறு,  ஓட்டுக்கு ரூ.500-லிருந்து ரூ.1000 வரை தரக்கூடிய திட்டத்தில் இருக்கிறது அதிமுக தரப்பு.  சரி, வேட்பாளர் லட்சுமி எப்படி?

 

Sivagasi Constituency congress and admk computation

 

திருத்தங்கல் நகர்மன்றத் தலைவராக லட்சுமி இருந்தபோது, ரூ.41 கோடி செலவிலான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. அரசு கலைக் கல்லூரியை இத்தொகுதிக்கு கொண்டுவந்தது உள்ளிட்ட சாதனைகள் சிலவற்றை ராஜேந்திரபாலாஜி பட்டியலிட்டாலும், ‘ரயில்வே மேம்பாலங்கள் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையே?’ என்பது போன்ற கேள்விகள் இத்தொகுதியில் எழுப்பப்படுகிறது.

 

நகர்மன்றத் தலைவராக லட்சுமி இருந்தபோது, பொது பிரச்சினைக்காக ‘பப்ளிக்’ யாரும் அவருடைய வீட்டுக்குப் போனால், ‘இங்கேயெல்லாம் பார்க்க வரக்கூடாது. எனக்கு ஒன்னும் தெரியாது. நான் பேருக்குத்தான் உட்கார்ந்திருக்கேன். பிரச்சினை எதுவானாலும் வைஸ் சேர்மனைப் போய் பாருங்க..’ என்று விரட்டியடிப்பாராம். இப்போதுகூட, கணவர் கணேசன் பின்னால் இருந்து இயக்கக்கூடிய, ஒரு பொம்மை எம்.எல்.ஏ.வாக மட்டுமே லட்சுமியால் செயல்படமுடியும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 

 

குறிப்பிட்ட சில பகுதிகளில், தேவர் சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ளக்கூடியவராக இருக்கிறார் அமமுக வேட்பாளர் சாமிக்காளை.  ‘நாடார் – தேவர்’ இடைவெளி காரணமாக, அசோகனுக்கு விழ வேண்டிய திமுக கூட்டணி வாக்குகள், ‘ஸ்ட்ரெந்த்’ காட்ட வேண்டும் என்ற சாதிப்பற்றின் காரணமாக, சாமிக்காளை பக்கம் திசைமாறிச் செல்வதற்கான சூழலும் இருக்கிறது.

 

நாம் தமிழர் – கனகப்ரியா, தொகுதி முழுவதும் நடந்தபடியே ஒரு சுற்றுவந்து, மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் – முகுந்தன்,  பெயரளவுக்கே வேட்பாளர். 

 

Sivagasi Constituency congress and admk computation

 

‘நாடார் வேட்பாளர்’ என்ற அடையாளத்தால், தேவர் உள்ளிட்ட பிற சமுதாயத்தவரின் வாக்குகள் வேறுபக்கம் திரும்புவதும், திமுக உள்ளடி வேலைகளும் அசோகனுக்கு சாதகமற்றவை. இரட்டை இலை சின்னமும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பின்னணியும், என்ன விலை கொடுத்தாவது வாக்குகளை வாங்கும் பணபலமும், அதிமுக வேட்பாளருக்கு ‘லட்சுமிகரமாக’ உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.