
பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன் தினம்(29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சோழிங்கநல்லூரில் அன்புமணி நேற்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் கே. பாலு உள்ளிட்டவர்களை கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். அதனை தொடர்ந்து, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்ட அன்புமணி, நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறி ராமதாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதில், பெரும்பான்மை நிர்வாகிகள் அன்புமணி கூட்டத்திற்கு வந்ததோடு, அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால், கட்சியை அன்புமணி முழுமையாக கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்புமணியும் ராமதாஸும் இருதுருவங்களாக மாறியிருக்கும் நிலையில், தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம் ஆகியோர் இன்று (31-05-25) சென்னையில் அன்புமணியை சந்தித்துள்ளனர். அதே சமயம், இன்று இரண்டாம் நாளாக சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம், தைலாபுரத்தில் ஆடிட்டர் சுப்புரத்தினம், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோரைச் சந்தித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று (31-05-25) தைலாபுரத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை சந்திப்பதற்காக வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “என்னால் கட்சிக்குள் பிரச்சனை வருகிறது என்று சொல்கிறார்கள். பா.ம.கவை விட்டு நான் விலக உள்ளதாக தவறான தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இப்படி கொச்சைப்படுத்தி பேசுவது நல்லதல்ல, அப்படி என்னை அவதூறு படுத்தும் விதமாக பேசுபவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி தான். என்னுடைய ஆசை மட்டுமல்ல எங்கள் கட்சியினரின் ஒவ்வொருவரும் ஆசையும் ராமதாஸும், அன்புமணியு, சந்தித்து பேச வேண்டும். அப்படி சந்தித்துவிட்டால், எங்களுடைய இயக்கம் வீறு கொண்டு எழும். பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என நேற்று வரைக்கும் ராமதாஸிடம் வற்புறுத்தினேன். பொறுமையாக இருங்கள், அவசரப்பட வேண்டாம் என அவரிடம் ரொம்பவே வற்புறுத்தி வருகிறேன். பலமுறை சொல்லியும் ராமதாஸ் கேட்கவில்லை. இது அவர் எடுத்த முடிவு.
என்ன காரணமோ தெரியவில்லை, கட்சிக்குள் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது. இதை சரி செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். 45 ஆண்டுகளாக உழைத்து வரும் நான், இந்த கட்சி சிதற வேண்டும் என்று நினைப்பேனா?. என்னை பற்றி அவதூறாக செய்தி வருகிறது. எப்படி மனசாட்சிக்கு விரோதமாக எழுதுகிறார்கள் என தெரியவில்லை. இதை கேட்டு ரொம்ப வருத்தப்படுகிறேன், அறையில் அமர்ந்துகொண்டு கண்ணீர் வடித்தேன். என்னுடைய வேதனைகளை ராமதாஸிடம் தெரிவித்தேன். கண்ணில் படாத இடத்துக்கு சென்றுவிட வேண்டும் அல்லது உயிரோடு இருக்கக் கூடாது என்ற இரண்டு முடிவுகளை எடுத்திருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். கட்சியில் நடக்கும் சம்பவத்தால் ஏற்பட்ட வேதனையில் இப்படி தெரிவித்து வருகிறேன்” என்று தெரிவித்தேன்.