
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் வரும் ஜூலை மாதத்தில் த.வெ.க.வின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இதற்கான தயாரிக்கும் பயணத்திட்டம் வகுக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் தான் தவெகவின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்யிடம் கிண்டலாகப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அந்த காணொளியில், “பாஜகவின் முன்னாள் தலைவராவது 10 பேரைக் கூட வச்சிக்கிட்டு, தேர்தலில் போட்டியிட்டு 18 சதவீத ஓட்டு வாங்கினார். ஆனால் எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை” என ஒருமையில் சிரித்துக் கொண்டே பேசுகிறார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “புறணி பேசுவதற்கெல்லாம் நாங்கள் கருத்துச் சொல்ல முடியுமா என்ன?. இதே ஆதவ் அர்ஜுனா தான் என்னை அதிமுக கூட்டணிக்கு வாருங்கள் என்றால். அவ்வாறு வந்தால் துணை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று கூறினார். அதற்கு என்ன செய்வது?” எனச் சிரித்தபடியே பதலளித்துவிட்டு சென்றார்.