
பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன் தினம்(29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சோழிங்கநல்லூரில் அன்புமணி நேற்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க பொருளாளர் திலகபாமா, மாவட்டச் செயலாளர் கே. பாலு உள்ளிட்டவர்களை கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். அதனை தொடர்ந்து, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்ட அன்புமணி, நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறி ராமதாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதில், பெரும்பான்மை நிர்வாகிகள் அன்புமணி கூட்டத்திற்கு வந்ததோடு, அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதனால், கட்சியை அன்புமணி முழுமையாக கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அன்புமணியும் ராமதாஸும் இருதுருவங்களாக மாறியிருக்கும் நிலையில், இன்று (31-05-25) இரண்டாம் நாளாக சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். அப்போது அன்புமணி பேசுகையில், “நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும், வலுபடுத்த வேண்டும். அதற்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நம்முடைய ராமதாஸ் குலசாமி, குலதெய்வம். அவர் கொள்கை வழிகாட்டி. இந்த கட்சியை உருவாக்கி 45 ஆண்டுகால உழைப்பு மற்றும் தொலைநோக்கு சிந்தனையோடு சிந்தனையோடு செயல்பட்டு வருகிறார். அவருடைய கொள்கை தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நீதி, ஒட ஒதுக்கீடு எல்லாம் நாம் கடைபிடித்து நாம் முன்னேறுவோம், வெற்றி பெறுவோம்.
இதற்கு, அப்புறம் இன்னும் நிறைய வேலை திட்டங்கள் எல்லாம் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமாக வேலை திட்டங்கள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறேன். நீங்கள் தான் கட்சி, கட்சி என் சொத்தோ யார் சொத்தோ கிடையாது. கடந்த மாநாட்டை நீங்கள் தான் வெற்றிகரமான நடத்துனீர்கள், ஆனால், பேர் மட்டும் எனக்கு கிடைத்தது. நீங்கள் தான் உண்மையான ஹீரோ. அதனால் அந்த அங்கீகாரம் நிச்சயமாக உங்களுக்கு நான் தருவேன். நாம் எல்லாம் ஒரே டீம். எனக்கு நீங்கள் அடிபணிந்தவர்கள் என்றெல்லாம் நான் எள்ளளவும் நான் நினைக்க மாட்டேன்.
சின்ன சின்ன குழப்பங்கள் எல்லாம் வருகிறது. அதெல்லாம் ஆகிடும் சரி ஆகிடும், சரிப்படுத்திவிடுவேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை, யாரையும் மாற்ற முடியாது. இதையெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன். ஏனென்றால் பொதுக்குழுவால் முறையாக தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உங்களால் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நம்முடைய கட்சியினுடைய விதிகள் இருக்கிறது. அதில் தலைவர் தான் கையெழுத்து போட வேண்டும், தலைவர் தான் நியமனம் செய்ய வேண்டும், பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதே வேளையில், இந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் மனதில் இருக்கும் வேதனை எனக்கு புரிகிறது. ஆனால், என் மனதில் எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியும். அதை வெளியில் சொல்ல முடியாது. எனக்கு தெரிந்தவருக்கு தெரியும். நம் கட்சியை பார்த்து அரசாங்கமே ஆடிப்போயிருக்கிறது. அந்த ஆட்டத்தினால் தான் நம்மை பற்றி இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். நம் மீது விமர்சனங்கள் வந்தால் அதை தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு நம் வேலை வேகமாக செய்ய வேண்டும்.
தைரியமாக இருங்கள், உங்களுக்கு நான் இருக்கிறேன். உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. கட்சிக்குள்ளேயும் செய்ய முடியாது, கட்சிக்கு வெளியேயும் செய்ய முடியாது. ஒரு வித்தியாசமாக ஒரு இயக்கமாக நாம் இருக்கிறோம். அதனால் இவர்களா, அவர்களா என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். நாம் எல்லாம் ஒன்றாக தான் இருக்கிறோம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது, அதையெல்லாம் ஒவ்வொன்றாக செயல்படுத்தலாம். இப்போது என்னால் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ராமதாஸின் கொள்கையை நாம் நிறைவேற்றுவோம், அவர் கண்ட கனவை நாம் நினைவாக்குவோம்” என்று கூறினார்.