Skip to main content

“ராமதாஸ் கொஞ்சம் மனம் இறங்கி வந்துள்ளார்” - ஜி.கே.மணி

Published on 31/05/2025 | Edited on 31/05/2025

 

 G.K. Mani informed Ramadoss has calmed down a bit

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும்  இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சோழிங்கநல்லூரில் அன்புமணி நேற்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகளை, கட்சிப் பதவியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். அதனை தொடர்ந்து, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்த்து நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு மட்டுமே இருக்கிறது என்று அன்புமணி கூறி ராமதாஸின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இத்தகைய சூழலில், இன்று (31-05-25) இரண்டாம் நாளாக சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.

இது ஒருபுறமிருக்க ஆடிட்டர் சுப்புரத்தினம், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். ராமதாஸை சந்தித்த பிறகு ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுக்கு இருக்கக்கூடிய மன கஷ்டங்களை அவரிடம் தெரிவித்துள்ளோம். பிரச்சனையை தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ராமதாஸுடன் பேச்சுவார்த்தை முயற்சி தொடர்ந்து நடத்தி வருகிறோம். அவர் சற்று மனம் இறங்கி வந்திருக்கிறார். சரி பார்க்கலாம் என்ற இடத்திற்கு ராமதாஸ் வந்துள்ளார்; அடுத்த அன்புமணியிடம் பேச வேண்டும். அன்புமணியுடன் பேசினால் நல்ல நிலைமை எட்டும் என எதிர்பார்க்கிறோம். ராமதாஸ், அன்புமணி ஆகியோர் உட்கார்ந்து பேசினாலே பிரச்சனை முடிவுக்கு வரும். ஆட்சி, அதிகாரம் குறித்து பேச வேண்டிய நேரம் இதுவல்ல” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்