Skip to main content

கனடா பிரதமரை சந்திக்காத இந்திய பிரதமர்! - காரணம் இதுதான்

Published on 20/02/2018 | Edited on 21/02/2018

இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வந்திருக்கும் கனடா நாட்டு பிரதமரை, பிரதமர் மோடி இதுவரை சந்திக்காதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெரும்பாலும் உலக நாடுகளின் தலைவர்களுடன் நட்புறவோடு பழகும் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஷ்டின் திரிதேயுவைப் பற்றி ட்விட்டரில் கூட இதுவரை வாய்திறக்கவில்லை. 

 

Justin

 

கனடா பிரதமர் கடந்த சனிக்கிழமை இரவு டெல்லி வந்திறங்கினார். அவரை விவசாயத்துறை இணை அமைச்சர் கஜேந்திர செகாவத் வரவேற்க சென்றிருந்தார். அவர் இங்கு ஒரு வாரம் அரசு முறைப்பயணம் மேற்கொள்வார் என சொல்லப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தாஜ்மகாலுக்கும், திங்கள்கிழமை குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திற்கும் தன் குடும்பத்தினருடன் இந்திய பாரம்பரிய உடைகளில் சென்று சுற்றிப் பார்த்தார். இன்று மும்பை வர்த்தக மன்றம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். ஆனால், இதுவரை ஒருமுறை கூட பிரதமர் மோடி அவரை சந்திக்கவில்லை.

 

இதுகுறித்து கனடாவிற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் விஷ்ணு பிரகாஷ், ‘உங்கள் கற்பனைகளில் தோன்றும் எண்ணங்களோடு இதைத் தொடர்புப்படுத்த வேண்டாம். கனடா பிரதமர் ஜஷ்டின் திரிதேயு நம் பெருமைமிகு விருந்தினர். அவர் அரசுமுறைப் பயணமாக வந்திருக்கிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் இங்கு வந்திருக்கிறார். மற்றும் அவரது பயணங்கள் விதிமுறைகளின் படி முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாடாக இருந்தாலும் ஒரு நாட்டின் தலைவரை மத்திய இணையமைச்சர் சென்று வரவேற்பதுதான் வழக்கம். அதன்படிதான் இங்கு நடந்திருக்கிறது. ஆனாலும், சீக்கியர்கள் விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலை ஒரு இனப்படுகொலை என கனடா நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தீர்மானமாக நிறைவேற்றினார்கள். மேலும், காலிஸ்தான் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜஷ்டின் அவர்களைப் புகழ்ந்து பேசினார். இதுகூட பிரதமர் மோடியின் மவுனத்திற்கு காரணமாக இருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.  

 

கனடா பிரதமர் ஜஷ்டின் திரிதேயுவை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் புதன்கிழமையும், பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமையும் சந்திக்கவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்