Skip to main content

நீட்: தற்கொலை செய்து கொண்ட மாணவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி -பா.ம.க. அறிவிப்பு 

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
ramadoss

 

நீட்  தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை கொண்ட மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலவந்தங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட்  தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை கொண்டது தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும், நானும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளோம்.

 

மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்திருக்க வேண்டிய இளம்தளிர் நீட் என்ற நெருப்பால் கருக்கப்பட்டிருக்கிறது. மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடிய மாணவன், தமது கனவு நனவாகாதோ என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது. நீட் என்ற நெருப்பால் இன்னும் எத்தனை மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவு  பொசுங்க போகிறதோ? என்ற கவலை மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த அச்சத்தையும், கவலையையும் போக்குவதற்கு ஒரே வழி நீட் தேர்வுக்கு முடிவுரை எழுதுவது தான். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்; பயன்கள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு கடுமையாக வலியுறுத்த வேண்டும்.

 

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் வலியுறுத்தியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ. 7 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து நிதியுதவியை வழங்குவர்.

 

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் மாணவர்கள் எவரும் தற்கொலை போன்ற முடிவுகளை உணர்ச்சி வேகத்தில் எடுத்து விடக்கூடாது என்றும் பா.ம.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.