Skip to main content

திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்! -கௌதமனின் தமிழ்ப் பேரரசு கட்சி தீர்மானம்!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
tamil perarasu katchi

 

திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 

 

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் கௌதமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...

 

1. வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் போராடி உயிர் நீத்த 20க்கும் மேற்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட இந்திய ஒன்றிய  விவசாயிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. 

 

2. விவசாயிகளுக்கு மட்டுமல்லாது மனித குலத்திற்கே எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 

 

3. கொரோனா நிறைந்த காலக்கட்டத்தில் தங்களது உயிரைத் துச்சமாக மதித்து களப்பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. 

 

4. தங்களை மக்களுக்கான அரசு என்று பிரகடனப்படுத்தும் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து எட்டு வழி சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும். மற்றும் கையகப்படுத்திய நிலங்களை உடனடியாக உரியவர்களிடம்  திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசினைத் தமிழ்ப் பேரரசு கட்சி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. 

 

5. அனிதா மற்றும் விக்னேஷ் உள்ளிட்ட பனிரெண்டுக்கும் மேற்பட்ட எங்கள் தமிழ்ப் பிள்ளைகளின் உயிரை பலி வாங்கிய நீட் என்கிற எமனை மத்திய அரசு நிரந்தரமாக நீக்க வேண்டும்.

 

6.தமிழீழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்க்கமாக முடிவெடுத்து அறிவித்தது போலவே அவர் வழியில் நின்று ஆட்சி செய்யும் அதிமுக அரசும் அதே நிலைப்பாட்டை கடைபிடிக்கவேண்டும். ஐநா உள்ளிட்ட உலகத்தின் பெரும் நீதிமன்றங்களில் தமிழீழப் பிரச்சினைகளில் தொடர்ந்து நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்து தமிழீழ தீர்வை உறுதிப்படுத்த வேண்டும்.

 

7.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட எழுவரின்  விடுதலையை உறுதிப்படுத்தாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நீதியினை நிலைநாட்டி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சி கேட்டுக்கொள்கிறது.

 

8. நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாத நிலையில் வல்லரசு நாடுகளோடு சேர்ந்து மேலை நாடுகளும் வாக்கு எந்திரத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு வாக்குச்சீட்டு முறையினைப் பயன்படுத்துவது போல் இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இருந்தாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சி வலியுறுத்துகிறது. 

 

9. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது, கூட்டணி குறித்த நிலைபாடுகள் என இவை அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு வழங்கப்படுகிறது.

 

10. மதவாதம், இனவாதம், மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ் மண்ணில் கலவரத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு எதிராகவும் கட்சிகளுக்கு எதிராகவும் தமிழ்ப் பேரரசு கட்சி இறுதிவரை உறுதியுடன் போராடும். 

 

11. தமிழக மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்போடு இருந்து திரை மயக்கத்திற்கும் பண மயக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் எதிர்காலத் தலைமுறைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் மண் வளம், தமிழர் மேம்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளைப் பேணிப் பாதுகாக்கின்ற வகையில் எங்களைப்போன்ற கள வீரர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சி அன்போடு கேட்டுக் கொள்கிறது. 

 

12. இந்திய ஒன்றியத்திலுள்ள மற்ற மாநிலங்கள்  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அம்மண்ணின் மைந்தர்களுக்கே 85 சதவிகிதத்திலிருந்து 90 சதவிகிதம் வரை வேலை வாய்ப்பு என உறுதிசெய்து சட்டம் இயற்றியது போலவே தமிழ்நாடு அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சி தீர்மானம் இயற்றி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.