Skip to main content

ஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்! தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

70 crore development work in seven days


தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 75 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அமைச்சரவையில் சீனியர்களைவிட ஜூனியர்களுக்குப் பல முக்கிய துறைகளைக் கொடுத்து களமிறக்கியிருக்கிறார். அதோடு அமைச்சர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உளவுத்துறை மூலம் அமைச்சர்களின் செயற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டுவருகிறார்.

 

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற சக்கரபாணிக்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். கட்சிக்காக முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்துக்கொண்டு, தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வந்ததின் மூலமே தொடர்ந்து ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணி வெற்றிபெற்றார். அதன் அடிப்படையில்தான் ஸ்டாலினும் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். அதோடு கொங்கு மண்டலத்தில் பரவிவந்த கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் சக்கரபாணியை களமிறக்கினார். அதன் மூலம் இரவு பகல் பாராமல் அதிகாரிகளைக் கொண்டு கரோனா தடுப்புப் பணியில் தீவிரம் காட்டி கட்டுப்படுத்தினார். கரோனாவிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து தனது துறையில் தீவிரம் காட்டிய சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். அதோடு ரேஷன் கடைகளுக்கும் விசிட் அடித்து ஆய்வு செய்ததுடன் மட்டுமல்லாமல், அங்கு வந்த பொதுமக்களிடம் பொருட்கள் தரமாகவும் எடை குறையாமலும் கிடைக்கிறதா என்று கேட்டு அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவருகிறார். 

 

70 crore development work in seven days

 


அதோடு கடந்த ஒருவாரமாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கேதையுறும்பு, புளியமரத்துக்கோட்டை, யோகிபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, குத்திலைப்பு உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளிலும், அதுபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கள்ளிமந்தையம், கூத்தாம்பாறை, கரியாப்பட்டி, புதூர், தேவத்தூர், கொத்தையம், பொருளூர், கீரனூர், மானூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளிலும் குடிநீர் மேல்நிலை தொட்டி, தரம் உயர்த்தப்பட்ட சாலைகள், சமுதாயக்கூடம், காவேரி கூட்டுக் குடிநீர், கலையரங்கம், ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி, சாக்கடை, கழிப்பறை, பள்ளிகளில் தடுப்புச் சுவர்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ. 70 கோடி வரை ஒதுக்கீடு செய்து, பூமிபூஜையும் போட்டு பணிகளை அங்கங்கே தொடங்கிவைத்தார். 

 

70 crore development work in seven days

 

அதுபோல் தனது எம்.எல்.ஏ. நிதி மூலம் கீரனூரில் கட்டப்பட்ட இலவச ஆம்புலன்ஸ் சேவை, சமுதாயக் கூடம், சுகாதார மையம் உள்பட சில புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தார். இப்படி ஒரே வாரத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றியம் மற்றும் நகரத்தில் ரூ. 70 கோடிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்ததைக் கண்டு தொகுதி மக்களே அசந்துபோய்விட்டனர்.

 

70 crore development work in seven days

 

இது சம்பந்தமாக ஒன்றிய பொறுப்பிலுள்ள சில உ.பி.களிடம் கேட்டபோது, “இத்தொகுதியைத் தொடர்ந்து எங்க அமைச்சர் சக்கரபாணி தக்கவைத்து வருவதாலேயே கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தொகுதி வளர்ச்சிப் பணிகள் சரிவர செய்ய முடியாமல் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அப்படியிருந்தும் அமைச்சர், தொகுதி மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி, அடிப்படை வசதிகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்து கொடுத்தார். தற்போது தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்ததின் மூலம் அண்ணன் சக்கரபாணி அமைச்சராகிவிட்டதால் தொகுதியில் உள்ள அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்ததுடன் மட்டுமல்லாமல் மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் போட்டு, தொகுதி வளர்ச்சிப் பணிகளைக் கூடிய சீக்கிரம் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதை அடுத்த ஆய்வுக் கூடத்தில் தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவும் போட்டிருக்கிறார். அதனாலேயே அதிகாரிகளும் அசுர வேகத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு மாவட்ட அளவில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளையும் தொடங்கிவைத்திருக்கிறார்” என்று கூறினார்கள்.

 

ஆக, ஸ்டாலின்  அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் சக்கரபாணியின் செயல்பாடு என்பது  துறை ரீதியாகவும் தொகுதி வளர்ச்சிப் பணி மூலமும்  மக்கள் பாராட்டுக்குரியவராக இருந்துவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.