
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுத் தேர்தலுக்கான பணிகள் இந்த குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நாளை (01.06.2025) நடைபெறுகிறது. இதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (31.05.2025) மதியம் மதுரைக்குச் சென்றடைந்தார்.
அதன்படி விமான நிலையத்திற்கு வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என். நேரு மற்றும் உட்பட பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதோடு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் மதுரையில் சுமார் 25 கி.மீ. தொலைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோட் ஷோ நிகழ்ச்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவருடன் அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் உடன் உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக மதுரையின் முதல் மேயராக பதவி வகித்த முத்துவின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ளார். ரோடு ஷோ நிகழ்ச்சியானது மதுரை பெருங்குடியில் தொடங்கி அவனியாபுரம் நோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஜீவாநகர், ஜெயந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் செல்ல உள்ளார். செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ரோடு ஷோவின் போது அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கினார். அச்சமயத்தில் அங்கிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். குழந்தைகள் தூக்கிக் கொஞ்சினார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதே போன்று பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.