
தென்னிந்தியாவின் வர்த்தக கேந்திரமாகத் திகழ்கிற தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், இந்த நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் டிஇயு (Twenty foot Equivalent Units) சரக்கு பெட்டகங்களையும் கையாளும் இலக்குடன், சரக்கு கையாளுதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக தேவைகளை துறைமுகத்தின் மூலம் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வேகமாக செயல்படுத்தி வருகின்றது. பாரத பிரதமரின் கதி சக்தி திட்டம் (PM Gati Shakti), கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கடல்சார் இந்தியா தொலைநோக்கு பார்வை 2030 (Maritime India Vision 2030) ஆகிய முயற்சிகளுடன் ஒருங்கிணைந்து துறைமுக திட்டங்களை விரைவாக மற்றும் திறமையாக செயல்படுத்துவதில் தேசிய அளவில் ஒரு முன் மாதிரியாக நிலை நிறுத்தி வருகிறது.
கடந்த வருடத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முக்கியமான மேம்பாட்டுப் பணித்திட்டங்களை மேற்கொண்டு, தனது சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தியுள்ளது. இதில் 2024 செப்டம்பர் மாதத்தில் 7 லட்சம் டிஇயு-க்களை (TEUS) கையாளும் திறனையுடைய ஒரு புதிய சரக்கு பெட்டக முனையத்தை (Tuticorin International Container Terminal) அமைத்தல், 7 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் உடைய பொது சரக்குகளை கையாளும் முனையத்தை (JSW Tuticorin Multipurpose Terminal) அமைத்தல், 2025 மே மாதத்தில், உள் துறைமுகத்தில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையினை ஆழப்படுத்தி விரிவாக்கும் பணிகள், வடக்கு சரக்கு தளம்-3 ஐ ஆழப்படுத்தும் பணிகள் போன்றவை அடங்கும்.
மேலும், 2025 மார்ச் மாதத்தில், சரக்குத் தளம்-7-ஐ பலதரப்பட்ட சரக்குகளைக் கையாளும் சரக்கு தளமாக அமைத்தல், ஜனவரி மாதத்தில், சரக்குத்தளம் பயன்பாடில்லாத நேரங்களில், இணைப்பு கன்வேயர் அமைப்பை நிறுவுதல், மார்ச் மாதத்தில் ஏற்றுமதி சரக்குப் பெட்டகங்களுக்காக நேரடி துறைமுக நுழைவு வசதி (Direct Port Entry facility) அமைத்தல் போன்ற திட்டங்களும் துறைமுகத்தின் முக்கிய மேம்பாடுகளில் அடங்கும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறை ஆலையை துவங்கியதின் மூலம் பசுமை ஆற்றல் மாற்றத்தை பயன்படுத்திய நாட்டின் முதல் இந்திய துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் விளங்குகிறது.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா திட்டங்களுக்காக 501 ஏக்கர் நிலத்தை துறைமுகம் ஒதுக்கி, அதன் மூலம் ரூ.41 ஆயிரத்து 860 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது குறிப்பித்தக்கது. தூத்துக்குடியை சுற்றி வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் வகையில், குறிப்பாக எலக்ட்ரிக் கார் உற்பத்தி, சோலார் பேனல் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு, பர்னிச்சர் பார்க், காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள், கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகன உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்றவைகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் உள்துறைமுக சரக்கு கையாளும் தளங்களை 14.20 மீட்டராக ஆழப்படுத்தி பலப்படுத்தும் திட்டங்கள் நடைபெறவுள்ளன. மேலும், 400 மீட்டர் நீளம் கொண்ட வடக்கு சரக்கு தளம் 4-ஐ அமைத்து, அத்தளத்தை காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை கையாளுவதற்கு வசதியாக பயன்படுத்துதல் மற்றும் சரக்கு தளம் 10 போன்ற திட்டங்கள் துறைமுகத்தின் திறனை அதிகரிக்கும். மேலும் துறைமுகத்தினுள் வரும் பனமாக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்கள் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் பணி. கப்பல் வரும் வழித்தடத்தினை ஆழப்படுத்தும் பணி ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.
கிழக்கிந்திய கடற்கரையில் ஒரு பிரத்தியேகமான கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது பார்த்தல் வசதியைக வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதியில் ஏற்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிழக்கிந்திய துறைமுகங்களுள் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முழுமையான கடல்சார் வர்த்தக மையமாக திகழும். எல்லா கால நிலைகளையும் தாங்கும் சுற்றுச்சூழல் அமைப்பும், சரியான திட்டமிடுதலும், ஒருங்கிணைப்பும் வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாகவும் திட்டமிட்ட விதமாகவும் செயல்படுத்துவதற்கு ஒரு தளமாக வ.உ. சிதம்பரனார் துறைமுகம் இருந்து வருகிறது என ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.
- செய்தியாளர் : எஸ். மூர்த்தி