Skip to main content

"என்னை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்" - தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மத்திய அமைச்சர் பேச்சு...

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

sadananda gowda breaks karnataka government rule

 

டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது. 


நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இன்று காலை முதல் நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வந்தாலும், பல நகரங்களில் கரோனா அச்சம் காரணமாக விமான பயணத்திற்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. மேலும் இந்த விமானப்பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆரோக்கிய சேது செயலி, கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல விதிமுறைகளை அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றாமல் சென்றது சர்ச்சையாகியுள்ளது. 

 

 


மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகா வரும் விமானப் பயணிகள் 7 நாட்கள் நிர்வாகத் தனிமையிலும், பின்னர் 14 நாட்கள் வீட்டில் தனிமையிலும் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், இன்று காலை விமான நிலையத்தில் வந்திறங்கிய சதானந்த கவுடா, அரசின் விதிகளை பின்பற்றாமல் நேராக தனது வாகனத்தில் ஏறி சென்றார். மக்கள் அனைவரும் அரசு விதிமுறைகளை பின்பற்ற கட்டாயப்படுத்தப்படும் சூழலில் மத்திய அமைச்சர் ஒருவர் விதிகளை மதிக்காமல் சென்ற இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள சதானந்த கவுடா, "நடைமுறையில், அரசு வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும், நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சில நபர்கள், குறிப்பாக பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு உண்டு. 

எனவே, நான் ஒரு அமைச்சர், நான் மருந்தக அமைச்சகத்தை கவனித்துக்கொள்கிறேன். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் போதுமான அளவு மருந்துகள் வழங்கப்படுகிறதா என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். மருந்து வழங்கல் முறையாக செய்யப்படாவிட்டால், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்? மருந்துகள் வழங்கப்படுவது அரசாங்கத்தால் முறையாக செய்யப்படாவிட்டால், அது அரசாங்கத்தின் தோல்வி அல்லவா? நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், இதையெல்லாம் யார் உறுதி செய்வார்கள்? எனவே, என்னை மற்ற நபர்களுடன் ஒப்பிட முடியாது" என தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.