
அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகியின் மூக்கை வீட்டு உரிமையாளர் ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் குடியிருப்போர் நலச்சங்க செயலாளரின் மூக்கை வீட்டு உரிமையாளர் ஒருவர் கடித்து துப்பியது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் தன்னுடைய கார் நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு ஒருவரின் கார் நிறுத்தப்பட்டதால் வீட்டின் உரிமையாளர் இது குறித்து குடியிருப்போர் சங்க செயலாளர் ரூபேந்திர சிங் யாதவ்விடம் முறையிட்டுள்ளார்.
அப்போது புகார் கொடுக்க வந்த வீட்டின் உரிமையாளருக்கும் குடியிருப்போர் சங்க செயலாளர் ரூபேந்திர சிங் யாதவ்விற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் ரூபேந்திர சிங் யாதவ்வின் மூக்கை கடித்துத் துப்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.