Skip to main content

3 மனைவிகள் 9 குழந்தைகள்; குடும்பத்தைச் சமாளிக்க முடியாததால் பலே திருடனான நபர்!

Published on 29/05/2025 | Edited on 29/05/2025

 

3 wives, 9 children Man turns to theft because he can't manage his family in bengaluru

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த 56 வயதான ரோஜம்மா வீட்டில் கடந்த மே 7ஆம் தேதி ரூ.46 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாகப் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பாபஜான் என்ற நபரும் மற்றும் அவரது 16 வயது மகன் ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பேரில், பாபஜானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

பாபஜானுக்கு 3 மனைவிகள் மற்றும் 9 குழந்தைகள் இருக்கின்றனர். வேலையில்லாமல் இருந்த பாபஜான், தனது பெரிய குடும்பத்தை பராமரிப்பதற்காக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக இதே போன்று திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பாபஜான், திறந்திருக்கும் அல்லது கதவுகளை திறக்கப்படாத வீடுகளை குறிவைத்து திருடி வந்துள்ளார். இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட தனது 16 வயது மகனுக்கும் பகல் நேரத்தில் பயிற்சி அளித்து வந்துள்ளார். அதன்படி, தந்தையும் மகனும் தொடர்ந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளானர். பாபாஜனின் மனைவிகள் ஸ்ரீரங்கப்பட்டணா, ஆனேகல் மற்றும் சிக்கபல்லாபுரா ஆகிய பகுதிகளில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டு பணம் கிடைக்கும் போதெல்லாம் பாபஜான், தனது மனைவிகளை பார்க்கச் செல்வார்.

சம்பவம் நடந்த தினத்தன்று ரோஜம்மா, துணிகளை உலர்த்துவதற்காக மொட்டை மாடிக்குச் சென்ற போது, அவரது தரைத்தளக் கதவைத் திறந்து வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட பாபஜான், தனது மகனை உள்ளே நுழையுமாறு சைகைக் காட்டியுள்ளார். அதன்படி அந்த சிறுவன் வீட்டுக்குள் புகுந்து 20 நிமிடங்களுக்குள் தங்க காதணிகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை திருடியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பாபஜான் கொள்ளையடித்த 188 கிராம் தங்க நகைகள், 550 கிராம் வெள்ளிகள், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1,500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பாபஜான் 8 திருட்டு வழக்கில் தொடர்பில் இருப்பதை தெரிந்துகொண்ட போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்