
பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே ஏற்கனவே பனிப்போர் வெடித்திருந்த நிலையில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியது குறித்துப் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நாடும் பார்த்தது. நான் என்ன குற்றம் செய்தேன்?. ஏன் எனக்கு இந்த பதவி நீக்கம் அல்லது பதவி இறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும். தான் செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார். இருப்பினும் அதற்குண்டான விளக்கத்தையும் பதிலையும் அளிப்பது எனது கடமையாகும். அன்றே அந்த மண்டபத்தில் (பத்திரிகையாளர்கள்) கேள்வி கேட்டீர்கள். இதே கேள்வியைக் கேட்டீர்கள் அதற்குப் பதில் சொல்கிறேன் என்று சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து கசப்பான வார்த்தைகளைக் கொண்ட மருந்தைத்தான் பதிலாகக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சொல்லப்போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியின் 35 வயதில் என்னுடைய சத்தியத்தையும் மீறி மத்திய கேபினட் அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். என்ன தவறு செய்தேன் எனக் கேள்வி கேட்டு என்னைக் குற்றவாளியாக மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்களிடமும் அடையாளம் காட்டி அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார். நான் அவருக்குப் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தைத் துவக்கி முதலில் அடித்து ஆட ஆரம்பித்தது அன்புமணிதான். ஏதோ நான் போகிற போக்கில் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. ஆதாரத்தோடு இன்று ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகின்றேன். பாண்டி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்து அதிர்ந்தது ஒட்டுமொத்த பொதுக்குழுக் கூட்டமும், ஊடக நண்பர்களும் சேர்ந்து அதிர்ச்சிக்குள்ளானீர்கள்.
மேடை நாகரிகமோ அல்லது சபை நாகரிகமோ எதையும் கடைப்பிடிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார். நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். முகந்தனை இளைஞரணி செயலாளர் என்று வீட்டில் எனக்கு உதவியாகவும் கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இருக்க முகுந்தனை நியமனம் செய்தேன். சுவற்றில் வீசிய பந்து திரும்புவது போல உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா?. மேடையில் மேடை நாகரிகம் கருதாமல் அனைவரின் முன்பும் காலை ஆட்டிக்கொண்டிருந்தது சரியான செயலா?. மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?.
அன்புமணி வாய்க்கூசாமல் பொய் பேசுவார். அதில் ஒரு இரண்டு பொய்யை மட்டும் நான் சொல்கிறேன். 108 பேர் மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதில் அன்புமணி அவ்வளவு பேரிடமும் சொல்லி போன் போட்டு ராமதாஸ் கூட்டும் கூட்டத்திற்கு போகாதீர்கள் என்று சொல்லி, எட்டு பேர் தான் இங்கே வந்தார்கள். மீதி 100 பேர் வரவே இல்லை. அவ்வளவு பேரிடமும் நேரடியாக போன் செய்து 'போகாதீங்க என்னை அடிப்படை உறுப்பினரிலிருந்து எடுக்கப் போகிறார்' என பொய் சொல்லி இருக்கிறார். அன்னைக்கே நான் செத்துப் போயிட்டேன். எம்ஜிஆர் தான் திரைப்படத்தில் 'நான் செத்துப் பிழைத்தவன்டா' எனப் பாடுவார். அது மாதிரி நான் மறுநாளே பிழைத்து விட்டேன். உயிரோடு இருக்கிறேன் என்பதால் தான் அந்த நீச்சல் குளத்தில் போய் நீச்சல் அடித்தேன். அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்குவார் என்பது கற்பனை கூட செய்ய முடியாது. இதை உலக ஏற்றுக்கொள்ளுமா? கட்சி ஏற்றுக் கொள்ளுமா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இது ஒரு பொய். இன்னொரு பொய் நேற்று சமூக ஊடக பேரவை கூட்டம் நடைபெற்றது அதில் அந்த கூட்டத்திற்கு அடிக்கிறதுக்கு ஆறு அடி ஆட்களை வைத்திருக்கிறார். இது எப்படி இருக்கிறது?. இந்த மாதிரி அடிதடிக்கெல்லாம் நான் போனதும் கிடையாது வந்ததும் கிடையாது'' என கண் கலங்கினார் ராமதாஸ்.
''நடந்த தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி போகலாம் என சொல்லி இவருக்கு ஒரு கடிதம் எழுதி கடைசியில் என் கைப்பட இந்த நாலு வரி எழுதினேன். 'நீயே (அன்புமணி) எடப்பாடி பழனிசாமி பேசு' எனக்கொடுத்தேன். அதேபோல் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமியும் சி.வி.சண்முகத்திடம் சொல்லி சரி என சொல்லி இருந்தார். ஆனால் அன்று ஒருநாள் பிஜேபியுடன்தான் கூட்டணி போகணும். திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என மன அன்புமணியும் சௌமியாவும் சொன்னார்கள்.
அதிமுகவுடன் பாமக கூட்டணி போய் இருந்தால் குறைந்தது மூன்று இடங்களில் ஜெயித்திருப்போம். அதிமுக ஆறேழு இடங்களில் ஜெயித்து இருப்பார்கள். எங்களுக்கு சின்னம் கிடைத்திருக்கும். அதிமுக-பாமக கூட்டணி என்பது அந்த காலத்தில் இருந்து இயற்கையான கூட்டணி. இந்த காலை அன்புமணி பிடித்துக் கொண்டார். இந்த பக்கம் தொடையை சௌமியா பிடித்துக் கொண்டார். இருவரும் அழுகிறார்கள். எதற்காக பாஜகவுடன் கூட்டணி போக வேண்டும் என அழுகிறார்கள். ரொம்ப நேரமாக அழுதார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உதிர்ந்த முத்துக்கள் என சொல்வார்களே அதுபோல அன்புமணி வாயிலிருந்து முத்துக்கள் உதிர்ந்தது. 'நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் தான் கொள்ளி வைக்க வேண்டும் எனக்கு 'என அழுதார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு சௌமியா எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டார்கள்.பாஜக முன்னாள் தலைவர் உள்ளிட்டோரிடம் பேசி ஏற்கனவே ஏற்பாடு செய்து விட்டார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் வெளியில் 'பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே..' என ஒரு கோஷம் கேட்கிறது. பெரிய சாப்பாடு விருந்து எல்லாம் ரெடியாகிவிட்டது. எனக்கு தெரியாமலே இதெல்லாம் நடக்கிறது'' என்றார்.
இந்நிலையில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 27 பேரை மாற்ற ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த பரபரப்புகளால் தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல ராமதாஸ் வீடு அமைந்துள்ள தைலாபுரத்தில் உள்ள வீட்டிற்கு கிளியூர் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.