
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே 'ஓம் சரவண பவ' யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.
இந்நிலையில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (29.05.2025) அதிகாலை காலமாகியுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் ''இறந்தது போல் தெரியவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகண்டு கிடப்பது போல் தெரிகிறது. எதிர்பார்க்கவே இல்லை. 18ஆம் தேதி காலை 10 மணிக்கு என் வீட்டிற்கு என்னை தேடிவந்து என் அன்னையார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டுப் போனார்.

நான் நினைத்திருப்பேனா அடுத்த பத்தாவது நாளில் நான் அவருக்கே இரங்கல் தெரிவிக்க வேண்டி இருக்கும் என்று. காலம் கொடியது. ராஜேஷ் என்ற ஒரு மனிதனின் மரணத்தில் மூன்று உருவங்கள் சுருண்டு இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு கலைஞர் இறந்து விட்டார். ஒரு முற்போக்கு சிந்தனையாளன் இறந்து விட்டார். ஒரு எழுத்தாளன் இறந்து விட்டார். ஒரே உடலில் சில மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை உச்ச நடிகராக மட்டுமே அவரை இந்த உலகம் பார்த்திருக்கும். அடிப்படையில் அவர் ஒரு பள்ளி ஆசிரியர். ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் கற்பித்தலில் தொடங்கி ஒரு கலைஞராக வளர்ந்து வருவதற்கு எத்தனை தடைகளை அவர் தாண்டி இருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் எனக்குப் பிடித்த ஒரு குணத்தை படைத்திருந்தார். அந்த குணம் என்பது முன்னோடிகளை மதிப்பது. இளைய கூட்டம் ராஜேஷிடம் குணம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதினால் நான் அவர்களுக்குச் சொல்வேன் 'இளைய கலைஞர்களின் கூட்டமே ராஜேஷின் குணம் ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். முன்னோடிகளை மதித்தல்' என்பதுதான் அந்த பெரும் குணம்'' என்றார்.